அடிதூள்! மாமல்லபுரம் அருகே வருகிறது புது துணை நகரம்.. ஆளுநர் உரையில் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், மாமல்லபுரம் அருகே துணை நகரம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையின் நடப்புண்டு முதல் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் இது தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.
அதன்படி இன்று காலை தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் தனது உரையைத் தொடங்கினார். என் இனிய தமிழ் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை ஆளுநர் ரவி தொடங்கினார்.

ஆளுநர் உரை
ஆளுநர் உரையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடு முதல்வர் அறிவித்த 2030க்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், மதுரையில் 3ஆவது தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், காலை உணவுத் திட்டம் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமத்துவபுரம்
தொடர்ந்து பேசிய அவர், அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி, பெரியார் சமத்துவபுரத்தைக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார். இந்த பெரியார் சமத்துவபுரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அவர், முதற்கட்டமாக 140 பெரியார் நினைவு சமத்துவபுரங்களைச் சீரமைக்க 190 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

துணை நகரம்
மினி டைடல் பார்க் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறார் கூறிய அவர், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்றும் இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மாமல்லபுரம் அருகே துணை நகரம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். கிழக்கு கடற்கரைச் சாலையில் அமையவுள்ள இந்த நகரம், சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநடப்பு
முன்னதாக ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் தெரிவித்தனர். மேலும், அவர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பும் செய்தனர். அதேபோல ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினரும் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications