சென்னை மக்களே கவனம்.. கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டால் இன்று முக்கிய சாலைகளில் ‛டிராபிக்’ மாற்றம்
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் சில இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக 100 ரூபாய் நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட உள்ளது. இதற்கான விழா சென்னையில் இன்று நடைபெற உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார்.

இந்த நினைவு நாணயத்தில் கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் நினைவு நாணயத்தில் 'டாக்டர் கலைஞர் மு கருணாநிதி' என்றபெயருடன் இடம்பெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கருணாநிதி நினைவு நாணயம் வெளியிடும் விழாவையொட்டி சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 18.08.2024 (இன்று) முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

* அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், வாலாஜா சாலை, அண்ணா சாலை மற்றும் காலைவாணர் அjங்கம் விழா நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படும்.இதனால் பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு பயணத்தினை திட்டமிட்டு செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
* மற்ற மூத்த கலைஞர்கள் கதீட்ரல் சாலை, ஆர்கே சாலை, காமராஜ் சாலை, அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்தை அடையலாம்.
* கலைவாணர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்து செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
* பல்வேறு மாவட்ட கனரக வாகனங்களில் இருந்து (பேருந்துகள் மற்றும் மாக்சிகேப்) பிற கட்சி வாகனங்கள் அண்ணா சிலை வழியாக பெரியார் சிலை , தீவுத்திடல் மைதானம், பிடபிள்யூடி மைதானம் வழியாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி செல்லுமாறு அனுமதிக்கப்படுவார்கள்.
* பெரியார் சிலை சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை, ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் அனைத்து இலகுரக வாகனம் மற்றும் தன்னார்வலர்களின் மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படும்.
* வாலாஜா சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, போர் நினைவு சின்னம், கொடிப்பணியாளர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் வணிக வாகனங்கள் 10 மணி முதல் மாலை 4 மணி வரை கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
* வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை இடையூறாகவும் மற்றும் விவிஐபி-கள் வரும் வழித்தடத்திலும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
* தொண்டர்கள் மற்றும் கட்சியினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
* சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலை முழுவதும் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications