சென்னை திரும்பும் மக்கள் கவனத்திற்கு.. 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம்!
சென்னை: சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து சென்னைக்கு திரும்புவோர் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, 2 நாட்களுக்கு போலீசார் போக்குவரத்து மாற்றங்கள் செய்திருக்கிறார்கள்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைந்தது. வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றதால், சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். வார இறுதி விடுமுறையையும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களிலேயே கழித்தனர். சென்னையில் இருந்து பயணிப்போருக்கு சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் விடுமுறை முடிவடைந்து நேற்றிரவு முதலே பலரும் சென்னை திரும்ப தொடங்கி இருக்கின்றனர். சொந்த வாகனங்களில் பயணிப்போர், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்று சென்னை போலீஸ் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை திரும்பும் மக்கள் வாகன நெரிசலில் சிக்காமல் இருக்க போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய இரு நாட்களிலும் தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு வழியாக தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சென்று சென்னையை அடையலாம்.
அதேபோல் சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பிவிடப்படும். அங்கிருந்து வந்த வாகனங்கள், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னையை அடையலாம். மேலும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் ஈசிஆர் சாலை, ராஜீவ் காந்தி சாலையை பயன்படுத்தி சென்னைக்குள் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications