சென்னை திரும்பும் பொதுமக்கள்.. உளுந்தூர்பேட்டையை தாண்ட முடியுமா.. 2 கிமீ தூரம் போக்குவரத்து நெரிசல்!
சென்னை: 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்களால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுமார் 2 கிமீ தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை திரும்பும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்குப் படையெடுத்தனர். இதற்கான சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகளுக்கு எளிதாகப் பயணிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

தற்போது 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிவுக்கு வந்துள்ளது. இன்றுடன் தொடர் விடுமுறை முடிவுக்கு வருவதால், சொந்த ஊருக்குச் சென்ற லட்சக்கணக்கான பொதுமக்கள் மீண்டும் சென்னை வரத் தொடங்கி இருக்கின்றனர். அரசு பேருந்து, ஆம்னி பஸ்கள், சொந்த வாகனங்களில் பொதுமக்கள் பலரும் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இன்று காலை முதலே சென்னையை நோக்கி வாகனங்கள் வரத் தொடங்கின. நெல்லை, மதுரை, திருச்சி என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வரத் தொடங்கி இருப்பதால், விழுப்புரம் மாவட்டத்தைக் கடந்து வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுமார் 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உருவாகி இருக்கிறது.
அதேபோல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருவதால், போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. மதியம் புறப்பட்ட வாகனங்கள் மாலை நேரத்திலேயே போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள நிலையில், இன்று இரவு புறப்படவுள்ள அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் திட்டமிட்டபடி காலை சென்னைக்கு வந்து சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கி இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் நீண்ட தூரம் வரிசையில் நின்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதி அடைந்து வருகின்றனர். இதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications