‛‛இளங்காத்து வீசுதே’’.. சென்னை அரசு பஸ்களில் பேட்டரி ஃபேன்! வெயில் கொடுமையால் சூப்பர் ஏற்பாடு
சென்னை: வெயிலில் இருந்து டிரைவர்களை காக்கும் வகையில் சென்னை மாநகர அரசு பஸ்களில் பேட்டரி மின்விசிறி பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் காலம் தொடங்கியது. ஆனாலும் கூட காலநிலை மாற்றத்தால் வெயில் தணிந்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இருப்பினும் கூட மீண்டும் வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் வெயிலில் இருந்து டிரைவர்களை காக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பஸ்களில் டிரைவர்களின் இருக்கை அருகே பேட்டரி ஃபேன் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மொத்தம் 1,000 பஸ்களில் பேட்டரி ஃபேன் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. டிரைவர் இருக்கையின் முன்பு அல்லது பின்புறம் இந்த பேட்டரி ஃபேன் பொருத்தப்பட்டு வருகிறது.
தற்போது வரை 250 பஸ்களில் பேட்டரி ஃபேன் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 750 அரசு பஸ்களில் வரும் நாட்களில் பேட்டரி ஃபேன் பொருத்தப்பட உள்ளது. பொதுவாக டிரைவர்கள் நீண்ட நேரம் அமர்ந்து பஸ் ஓட்டுவதால் என்ஜின் சூடு அவர்களை பாதிக்கும். இத்தகைய சூழலில் கடும் வெயில் என்பது அவர்களுக்கு கூடுதல் சிரமத்தை அளிக்கிறது.
இதனால் டிரைவர்களை காக்கும் வகையில் சென்னை மாநகர அரசு பஸ்களில் பேட்டரி ஃபேன் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் டிரைவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications