சென்னை விமான நிலையத்தில் பரபர.. ஓடுபாதையில் சடன் பிரேக் போட்டு நின்ற இண்டிகோ விமானம்!
சென்னை: சென்னையிலிருந்து 156 பயணிகளுடன் அந்தமான் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஓடுபாதையில் விமானம் சடன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று மாலை இண்டிகோ விமானம், 148 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் புறப்பட தயாரானது. ஓடுபாதையில் விமானம் புறப்பட்ட போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட விமானி உடனடியாக விமானத்தை, டேக்ஆஃப் செய்யாமல் ஓடுபாதையிலேயே சடன் பிரேக் அடித்து நிறுத்தினார்.

விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு ஓய்வு அறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மாற்று விமானத்தில் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பயணிகள் பல்வேறு கேள்வியை எழுப்பியுள்ளனர்.
பண்டிகை நேரம் என்பதால் விமான கட்டணம் முன்னெப்பொதும் இல்லாத அளவை விட அதிகரிக்கப்பட்டிருந்தது. கட்டணத்தை மட்டும் உயர்த்தி கேட்டு வாங்கும் விமான நிறுவனங்கள் ஏன்? விமானங்களை சரிபார்ப்பதில்லை என்று பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது இது முதல்முறையல்ல. கடந்த சில மாதங்களாகவே இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய சுமார் 8 இண்டிகோ விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றன. அவசரமாக போக வேண்டும் என்றுதான் விமானத்தை நாடுகிறோம். ஆனால் விமான நிறுவனங்கள் செய்வதை எல்லாம் பார்க்கும்போது, பேசாம ரயிலை புடிச்சே வீட்டுக்கு போய் சேர்ந்துவிடலாம் போல இருக்கிறது.
அன்றைய தினம் விமானம் தாமதம் காரணமாக சிஸ்டம் சரியாக வேலை செய்யவில்லை. எனவே செக்-இன் செயல்முறை பாதிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க வேறு வழியின்றி ஊழியர்கள் பயணிகளுக்கு கைகளால் எழுதிய போடிங் பாஸை வழங்கியிருந்தனர். இந்த ஆண்டின் சிறந்த விமானம சேவை நிறுவனமாக இண்டிகோதான் இருப்பதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவித்திருக்கின்றன. ஆனால், அப்பேற்பட்ட இண்டிகோவில் இப்படியான கோளாறுகள் வரலாமா? என்று பயணிகள் ஆவேசத்தோடு கேள்வி எழுப்பியுள்ளனர்.
சர்வதேச அளவில் அதிகமான எண்ணிக்கையில் விமான விபத்துக்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் இருக்கிறது. இங்கு கடந்த 1945லிருந்து இன்றைய தேதி வரையில் 93 விமான விபத்துக்கள் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக அமெரிக்காவில் 788 விபத்துக்கள் நடந்திருக்கின்றன. இதில் 10,625 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் 360 விபத்துக்களும், 7,298 உயிரிழப்புகளும், பிரேசிலில் 185 விபத்துக்களும் 2,725 உயிரிழப்புகளும் நடந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications