ஆடுகளை திருடி.. சினிமா தயாரித்து உல்லாச வாழ்க்கை.. சிக்கிய சென்னை பிரதர்ஸ் குறித்து பரபர தகவல்
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் மேய்ச்சலில் உள்ள ஆடுகளை காரில் வந்து நோட்டம் விடும் சகோதார்கள், மேய்ச்சலில் உள்ளவர் அசந்து இருக்கும் நேரத்தில் இரண்டு ஆடுகள், அல்லது ஒரு ஆட்டை அப்படியே தூக்கி கொண்டு ஓடிவிடுவார்கள். இப்படி திருடிய பணத்தில், சினிமா படம் எடுத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள் அண்மையில் சிசிடிவி காட்சியால் மாதவரத்தில் போலீசாரிடம் சிக்கினர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் 2வது தெருவை சேர்ந்த நிரஞ்சன்(36) மற்றும் அவரது சகோதரர் லெனின்குமார்(32). இவர்கள் இருவரும் சென்னையின் புறநகர் பகுதிகளான மாதவரம், மீஞ்சூர், பொன்னேரி, செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் காரில் வருவார்கள்.
அப்படியே வந்து நோட்டமிட்டு மேய்ச்சலில் உள்ள ஆடுகளை திருடி காரில் தூக்கிப்போட்டு சென்று விற்பார்க்ள். இந்த திருட்டு தொழிலை கடந்த 3 வருடங்களாக செய்து வந்திருக்கிறார்கள்.

சிசிடிவி காட்சி
இந்நிலையில் சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கம் ரிங் செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் ஆடுகளை வளர்த்து வரும் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 9ம் தேதி இவரது ஆட்டை நிரஞ்சனும் அவரது சகோதரும் திருடி சென்றார்கள். மாதவரம் போலீசில் இதுபற்றி புகார் அளித்திருந்தார். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிறப்பு படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடினர்.

குவிந்த புகார்
இதனிடையே அந்த பகுதியில் ஆடு வளர்ப்போரிடம் அடிக்கடி ஒரு ஆடு, இரண்டு ஆடுகள் அடிக்கடி திருடு போவது போலீசுக்கு தெரியவந்துள்ளது. அதையும் காரில் வந்த நிரஞ்சன் சகோதரர்களே திருடியதும் தெரியவந்தது. இதனால் போலீசார் இவர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

சிக்கினர்
மாதவரம் மஞ்சம்பாக்கம் ரிங் ரோடு பகுதியில் ஆடுகளை திருடியவர்களை பிடிக்க போலீசார் கண்காணிப்பு பிடியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருவர் காரில் வந்து இறங்கி சாலையில் படுத்து கொண்டிருந்த ஆட்டை திருட முயன்றார்கள். அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டு இருந்த தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

8000 வரை ஆடு விற்பனை
விசாரணையில் நிரஞ்சன்(36) மற்றும் அவரது சகோதரர் லெனின்குமார்(32) ஆகியோர் கடந்த சில வருடங்களாக காரில் வந்து ஆடுகளை திருடி விற்பது தெரியவந்தது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 ஆடுகள் திருடி, ஒவ்வொரு ஆட்டையும் 8000 ரூபாய் வரை விற்றிருக்கிறார்கள். அதில் கிடைத்த பணத்தை கந்து வட்டிக்கு விட்டு வந்ததும் சினிமா படம் தயாரித்தும், நடித்தும் இருப்பது தெரியவந்தது.

சிக்கிய பிரதர்ஸ்
நிரஞ்சன் மற்றும் லெனினை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்து அவரது தந்தை விஜய் சங்கர் ‘நீ தான் ராஜா' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வருதையும் போலீசார் கண்டுபிடித்தனர். பணம் இல்லாததால் படப்பிடிப்பு நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. . மகன்கள் படத்தை திரும்ப நடத்த விரும்பிய நிலையில் அதற்கு உதவ முடிவு செய்திருக்கிறார்கள். அதற்காக மீண்டும் ஆடுதிருடிய போது தான் போலீசிடம் சிக்கியுள்ளார்கள். இதையடுத்து கைதான நிரஞ்சன் மற்றும் லெனின் சகோதரர்கள் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். இவர்களிடம் இருந்து ஒரு மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications