சட்டமன்ற தேர்தல்: சென்னையில் குவிக்கப்பட்ட 21,000 போலீஸ்+2500 CRPF வீரர்கள்! உச்சக்கட்ட பாதுகாப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 21,000 போலீசார் மற்றும் 2,500 சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அபிஷன் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில், சென்னை வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

சுமார் 21,000-க்கும் மேற்பட்ட காவலர்கள், 31 கம்பெனிகளைச் சேர்ந்த சுமார் 2,500 வீரர்கள், இது தவிர, 2,000 ஊர்க்காவல் படையினர் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவத்தினர், முன்னாள் காவலர்களும் பாதுகாப்புப் பணியில் இணைந்துள்ளனர். சென்னையில் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில், ஒவ்வொன்றிலும் தலா 4 ஆயுதம் ஏந்திய மத்தியப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
400-க்கும் மேற்பட்ட நடமாடும் ரோந்து வாகனங்கள் நகரம் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை மீறி வெளிநபர்கள் தங்குவதைத் தவிர்க்க, நேற்று இரவு முழுவதும் சென்னை முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தியிருந்தனர்.
21 விநியோக மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்தவுடன், மீண்டும் அதே பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு (Counting Centres) இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும். அங்கு மே 4-ம் தேதி வரை 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும்.












Click it and Unblock the Notifications