15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே
சென்னை: சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு (Chennai Velankanni) முதல் முறையாக நேரடி ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது. 15 ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது ரயில்வே இந்த கோரிக்கையினை நிறைவேற்றியுள்ளது. திருநல்லாறு, நாகூர், வேளாங்கண்ணி என மூன்று வெவ்வேறு வழிபாட்டு தலங்கள் வழியாக இயக்கப்பட உள்ள இந்த ரயிலுக்கு பயணிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வேளாங்கண்ணி சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. சுற்றுலாவிற்காக அங்கு ஆண்டுக்கு சுமார் 2 கோடி பயணிகள் வருகை தருகிறார்கள். தினசரி சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களும், வார இறுதி நாட்களில் சுமார் 25 ஆயிரம் பேரும் வந்து செல்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் சென்னையில் இருந்து நேரடி ரயில் சேவை இயக்க வலியுறுத்தி பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

தினசரி விரைவு ரயிலாக மாற்றம்
சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தாம்பரம் - காரைக்கால் சிறப்பு ரயில், சென்னை - வேளாங்கண்ணி தினசரி விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர், நாகை வழியாக சென்ற இந்த ரயில் இனிமேல் காரைக்கால், பேரளம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. லிங்க் கோச் முறையாக சென்று வந்த வேளாங்கண்ணி ரயில் இனி 23 பெட்டிகளுடன் செல்லும்.
மே 20 ஆம் தேதி முதல்
கடந்த 2022 ஆம் ஆண்டு லிங் கோச் முறை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படமால் இருந்தது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு காரைக்கால், பேரளம் வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்கப்படுகிறது. திருவாரூர், நாகை வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர், நாகை ரயில் நிலையங்களில் ரயில் என்ஜினை திசை திருப்ப வேண்டிய அவசியம் இருக்காது. இதன் காரணமாக பயண நேரமானது சுமார் 30 நிமிடங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாகை - வேளாங்கண்ணி இடையே அகலப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. வரும் மே 20 ஆம் தேதி முதல் தினமும் நேரடி ரயில் சேவையாக சென்னை டூ வேளாங்கண்ணிக்கு ரயில்கள் இயக்கப்படும்.
மூன்று ஆன்மிக திருத்தலங்கள்
சென்னை தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். இதேபோன்று மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.35 மணியளவில் சென்னை தாம்பரத்தை வந்தடையும்.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, பேரளம், காரைக்கால், நாகூர், நாகை ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் இந்த ரயிலானது நின்று செல்லும்.. திருநள்ளாறு, நாகூர், வேளாங்கண்ணி என மூன்று ஆன்மிக திருத்தலங்கள் வழியாக இயக்கப்படுவது சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது. மூன்று வெவ்வேறு வழிபாட்டு தலங்கள் வழியாக இயக்கப்பட உள்ள இந்த ரயிலுக்கு பயணிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications