காலையிலேயே செம ஷாக்..விஜய்யின் சர்கார் பாணியில் வாக்களித்த நபர்.. ஆனாலும் வருத்தம்தானாம்.. ஏன்?
சென்னை: பெசன்ட் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் விஜய் நடித்த 'சர்கார்' பாணியில் வாக்களித்திருக்கிறார். எனினும், இந்த முறையில் வாக்களித்தது தனக்கு வருத்தமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணி நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 54% வாக்குகள் பதிவாகியிருந்தன.
இன்று காலை நடிகர் விஜய் சைக்கிளில் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். இந்நிலையில். சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் விஜய்யின் சர்கார் படத்தில் வருவதைப் போல 49பி படிவத்தைப் பயன்படுத்தி டெண்டர் முறையில் வாக்களித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
காலையிலேயே ஷாக்
சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் காலை 8:30 மணியளவில் வாக்கு செலுத்தத் தனது வாக்குச்சாவடிக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த தேர்தல் அதிகாரி, அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். வாக்குப்பதிவு தொடங்கியே 1.30 மணி நேரம் தான் ஆகியிருந்ததால் இதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்,
49 பி டெண்டர் முறை
தான் இப்போது தான் வாக்களிக்க வருவதாகவும் தான் நிச்சயம் வாக்களிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணன் கூறியுள்ளார். இதையடுத்து ஆலோசனை செய்த வாக்குப்பதிவு மைய அதிகாரிகள், 49 பி வடிவத்தைப் பயன்படுத்தி டெண்டர் முறையில் வாக்களிக்கக் அவருக்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து அவர் டெண்டர் முறையில் வாக்களித்தார்.
வருத்தமாக உள்ளது
இது குறித்து அவர் கூறுகையில், எனது 70 ஆண்டு அனுபவத்தில் இப்படி நடைபெறுவது. இதுவே முதல்முறையாகும். எனது வாக்கை வேறொருவர் பதிவு செய்தது விட்டதாகத் தேர்தல் அதிகாரிகள் கூறினார். இருப்பினும் நான் வாக்களிக்க வேண்டும் என்று கூறியதால், என்னை டெண்டர் முறையில் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். ஓட்டுப் போட்டது மகிழ்ச்சிதான் என்றாலும், படிவம் 49பி பயன்படுத்தி டெண்டர் முறையில் வாக்களித்தது சற்று வருத்தமாகவே உள்ளது என்றார்.
விஜய்யின் சர்கார்
நடிகர் விஜய் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்கார். ஒருவரது வாக்கு ஏற்கனவே போலியாக செலுத்தப்பட்டிருந்தால், 49பி பயன்படுத்தி டெண்டர் முறையை பயன்படுத்தி அவரை வாக்களிக்க அனுமதிக்கலாம் என்பது குறித்து இதில் விளக்கப்பட்டிருந்தது. இந்த முறையை பயன்படுத்தித்தான் கிருஷ்ணன் தற்போது வாக்களித்துள்ளார்.
எண்ணப்படாது
இருப்பினும், பொதுவாக டெண்டர் முறையில் பெறப்படும் ஓட்டுகள் எண்ணிக்கையின்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. முதல் இரண்டு இடங்களைப் பெற்ற வேட்பாளர்களுக்கு இடையே உள்ள வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தால் மட்டுமே டெண்டர் வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.