"ட்விஸ்ட் வைத்த வானிலை!" 13 நாட்கள் 100 டிகிரி வெப்பம்! இப்போது சென்னையில் கனமழை! குழப்பும் கிளைமேட்
சென்னை: தமிழ்நாட்டில் இந்த மாதம் முதல் இரண்டு வாரங்கள் வெப்பம் கொளுத்தி வந்த நிலையில், இப்போது சில நாட்களில் வானிலை தலைகீழாக மாறி சென்னையில் மழை கொட்டிய வருகிறது.
கோடைக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பம் மிக மோசமானதாகவே பதிவாகி வருகிறது. இந்தாண்டும் தமிழ்நாட்டில் வெப்பம் மிக மோசமாக இருந்தது.
மதிய நேரத்தில் வெப்பம் கொளுத்தி வந்த நிலையில், பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

சென்னை: குறிப்பாகச் சென்னையில் வெப்பம் மிக மோசமாகவே இருந்தது. இந்தாண்டு மட்டும் சென்னையில் மொத்தம் 18 நாட்கள் வெப்பம் 30 டிகிரி செல்சியஸை தாண்டி இருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் அதிக நாட்கள் 40 டிகிரி செல்சியஸை தாண்டியதில் இந்தாண்டு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முன்னதாக 2012, 2019 ஆண்டுகளில் சென்னையில் வெப்பம் 20 நாட்கள் 40 டிகிரி செல்சியஸை தாண்டியிருந்தது. அதன் பிறகு இந்தாண்டு தான் 18 முறை தாண்டியிருந்தது.
வழக்கமாக மே மாதம் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு மே மாதத்தைக் காட்டிலும் ஜூன் மாதம் வெப்பம் மிக மோசமாக இருந்தது. ஜூன் மாதம் மட்டும் சென்னை நுங்கம்பாக்கத்தில் 13 நாட்கள் தொடர்ச்சியாக வெப்பம் 100 டிகிரி செல்சியஸை தாண்டியது. அதிலும் குறிப்பாக இரு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 21 இடங்களில் வெப்பம் 100 டிகிரி செல்சியஸை தாண்டியது.
வெப்பம்: அந்தளவுக்குத் தமிழ்நாட்டில் இந்தாண்டு வெப்பம் நம்மை வைத்துச் செய்து வந்தது. சென்னைவாசிகள் மதிய நேரத்தில் வெளியே சென்றால் வேர்வையிலேயே குளித்துவிடலாம் என்பது போன்ற ஒரு சூழலே இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே சென்னையில் வெப்பம் படிப்படியாக வெப்பம் குறைந்து வந்தது. இதனால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில், சில நாட்களில் வானிலை தலைகீழாக மாறி நேற்றிரவு முதல் சென்னையில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
வழக்கமாக ஜூன் 1 முதல் 18 வரை 3.3 செமீ மழை தான் பெய்யும்.. ஆனால் நேற்று வரை 2.5 செ.மீ மழை மட்டுமே பெய்திருந்தது. இது இயல்பாகப் பெய்யும் மழையைக் காட்டிலும் 22% குறைவாகும். ஆனால், இன்று ஒரே நாளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நேற்றிரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், இப்போது இயல்பைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம் மழை பெய்துள்ளது.

கனமழை: 3 மடங்கு என்பதால் மிகப் பெரிய மழை என்று நினைக்கத் தேவையில்லை. ஜூன் மாதம் வழக்கமாகவே குறைந்த அளவே மழை பெய்யும். எனவே, அத்துடன் ஒப்பிடும் போது, மழை அதிகமாகப் பெய்து இருக்கிறது. அதிகபட்சமாகக் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மீனம்பாக்கத்தில் 16 செமீ மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து தரமணி, ஆலந்தூர் 14 செமீ மழை பெய்துள்ளது.
இப்படி சென்னையில் சில மணி நேரத்தில் கொட்டிய கனமழையால் நகர்ப் பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றும் பணிகளைச் சென்னை மாநகராட்சி ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னையில் சில இடங்களில் மழை காரணமாக மரங்களும் விழுந்துள்ள நிலையில், அதை நீக்கும் பணிகளிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications