சிலர் “ட்விஸ்ட்” பண்ணி விடுறாங்க.. சென்னைக்கு நிச்சயம் நிரந்தர தீர்வு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: "சென்னையில் கடந்த 3 மாதங்களாக தீவிரமாக மேற்கொண்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள் நல்ல முறையில் கை கொடுத்திருக்கிறது. மழைநீர் தேங்குவதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும்." என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை கனமழை வெளுத்து வாங்கியது. பின்னர் படிப்படியாக மழை குறைந்து தற்போது ஓய்ந்துள்ளது.

மழைநீர் தேங்கியது: கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைக்கு மத்தியிலேயே, மழைநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்துவிட்டது. ஒருசில இடங்களில் மட்டுமே தற்போது மழைநீர் தேங்கியுள்ள சூழலில் அங்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு: இன்று சென்னை பள்ளிக்கரணையின் நாராயணபுரம் ஏரியில் மழைநீர் அளவு குறித்து, நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளும், ஜேசிபி மூலம் வண்டல் மண் கழிவுகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் அதனை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.
ஸ்டாலின் பேட்டி: அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "சில பேர் இன்னும் 'ட்விஸ்ட்' பண்ணி சொல்லிட்டு இருக்காங்க. நாங்கள் செய்துள்ளதை நீங்களே மக்களிடம் சென்று கேளுங்கள். சென்னையில் கடந்த 3 மாதங்களாக தீவிரமாக மேற்கொண்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள் நல்ல முறையில் கை கொடுத்திருக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததுமே ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைத்து ஆய்வு செய்து சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் 20 % பணிகள் பாக்கி இருக்கிறது. அதனையும் கூடிய சீக்கிரம் முடித்து விடுவோம்.
நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும்: மழைநீர் தேங்குவதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும். தூய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் இந்த பணியில் சிறப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் சென்னை மாநகர மக்கள் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications