சென்னை சத்யபிரியா கொலை! குற்றவாளி சதீஷுக்கான தண்டனை விவரங்கள் நாளை வெளியீடு!
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் வாலிபர் சதீஷை குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படுகிறது.
இந்த தீர்ப்பு கடந்த 27ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் நாளை, குற்றவாளி சதீஷுக்கான தண்டனை விவரங்கள் வெளியாகின்றன. சதீஷுக்கு எந்த மாதிரியான தண்டனை கொடுக்கப்படும் என்பது குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

கொலையான சத்யபிரியாவின் தந்தை தற்கொலை செய்த நிலையில் தாயோ புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அந்த இளம்பெண்ணின் தங்கைகள் தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23).
இவர் சத்யபிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு சதீஷ் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.
இப்படித்தான் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்குச் செல்ல சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யபிரியா வந்தார். அப்போது அங்கு சதீஷும் வந்தார். ரயில் வரும் வரை காத்திருந்த சத்யபிரியாவிடம் போய் தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு சத்யபிரியா, மறுக்க சதீஷுக்கு கோபம் வந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து ரயில் வந்தது. அப்போது சத்யபிரியாவை தள்ளிவிட்டார். இதனால் அந்த பெண் ரயில் மோதி இறந்துவிட்டார். தனது மகள் இறந்த துயரத்தை ஏற்க முடியாத மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பெண்ணின் தாய் வரலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது.
சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு தொடர்பாக, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார். சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். அனைத்து விசாரணையும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கில் கடந்த 27ஆம் தேதி சதீஷ் குற்றவாளி என நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார். தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படுகிறது. இந்த தண்டனையை எதிர்த்து சதீஷ் மேல்முறையீடு செய்வாரா, இல்லை தான் செய்த தவறுக்கான தண்டனையை எதிர்கொள்வாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications