நைட்டு லேட்டா வராதே! கண்டித்த தந்தை.. மகன் தூக்கிட்டு தற்கொலை.. உடனே தாய் எடுத்த விபரீத முடிவு!
சென்னை: "இரவில் லேட்டாக வராதே" என தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகன் இறந்த துக்கத்தில் தாயும் தற்கொலை செய்து கொண்டார். சென்னை வியாசர்பாடி கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு இளவரசி (50) என்ற மனைவியும், சுசில் (21) என்ற மகனும் உள்ளனர்.
சுசில் பி.காம் படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள நடனக் கல்லூரியில் வேலை செய்து வருகிறார்.

கண்டித்த தந்தை
இவர் இரவில் வேலை முடித்து நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்றுவிட்டு நள்ளிரவு 2 மணிக்குதான் வீட்டுக்கு வருவார் எனக் கூறப்படுகிறது. இரவில் தாமதமாக வருவதால் சுசிலை அவரது தந்தை பல முறை கண்டித்துள்ளார். "வேலை முடிந்தால் வீட்டுக்கு வா; ஏன் நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறாய்" எனக் கேட்டு வந்துள்ளார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

மீண்டும் தாமதம்
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் சுசில் தாமதமாக வீட்டுக்கு வந்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தந்தை ரகுநாதன், சுசிலை கண்டித்ததாக கூறப்படுகிறது. பதிலுக்கு சுசிலும் தந்தையை திட்டியுள்ளார். அப்போது அவரது தாயார் இளவரசி, மகனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதையடுத்து, மனைவி இளவரசியையும், மகன் சுசிலையும் ரகுநாதன் கடுமையாக திட்டியுள்ளார்.

தற்கொலை
இதனைத் தொடர்ந்து, சுசில் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் அவர் வெளியே வராததால் பெற்றோர் கதவை தட்டியுள்ளார். ஆனால் அவர் திறக்காததால் கதவை உடைத்து பார்த்த போது மின்விசிறியில் சுசில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு வந்து சுசிலின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாயும் தற்கொலை
அப்போது மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்வதாக கூறிய தாய் இளவரசியும், மகன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை கண்டித்ததால் மகனும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வியாசர்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எம்கேபி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications