தி நகரில் மெட்ரோ ரயில் எப்போது ஓடும்.. சென்னை மெட்ரோ வெளியிட்ட தகவலால் குஷியில் கோடம்பாக்கம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் தகவல் தி நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் பகுதி மக்களிடையே குஷியை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அவர்கள் நிம்மதியாக கோயம்பேடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எளிதாக போக முடியும். ஏனெனில் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் மெட்ரோவிலிருந்து பனகல் பார்க் மெட்ரோ வரையிலான பூமிக்கு அடியில் செல்லும் வழித்தடம் வரும் 2027ம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படியே பணிகள் தொடங்கிய நிலையில், முதல்கட்ட மெட்ரோ ரயில் கடந்த 2016ம் ஆண்டு முதல் படிப்படியாக அமலுக்கு வந்தது. தற்போது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரை மற்றும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கபட்டு வருகிறது. சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட பாதை இரண்டு பாதைகளிலும், இயக்கப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் சுரங்கப்பாதை வழியிலும், வடபழனி, கோயம்பேடு பாதையில் உயர்மட்ட பாதையிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் மாதம் தோறும் சுமார் 90 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். சென்னையின் மையப்பகுதி மக்களுக்கு மெட்ரோ ரயில் வரப்பிரசாதமாக இருக்கிறது.

சென்னை மெட்ரோ வழித்தடத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த காரணத்தால் இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இதன்படி, பூந்தமல்லி டூ கலங்கரை விளக்கம், மாதவரம் டூ சிறுசேரி, மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை மூன்று வழித்தடங்களில பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த மூன்றுமே கிட்டத்தட்ட சென்னை முழுவதையும் இணைக்கிறது. மற்ற பகுதிகளை புறநகர் மின்சார ரயில் இணைப்பதால் ரயிலில் சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் போக முடியும் என்கிற நிலை வரப்போகிறது. போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதாக மெட்ரோவில் பயணிக்கலாம்.கார்கள் வைத்துள்ளவர்கள், கார்களை வீட்டில் நிறுத்திவிட்டு, எளிதாக மெட்ரோவில் பயணிக்க முடியும் என்கிற நிலை வரப்போகிறது.
தற்போதைய நிலையில் இந்த ( 2025) ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி டிப்போவிலிருந்து போரூர் சந்திப்பு வரையிலான உயர்த்தப்பட்ட மெட்ரோ பாதையில் ரயில்கள் ஓடத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அங்கு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. காரிடர் நான்கில் இந்த வழித்தடம் ஆகும். அதன்பிறகு படிப்படியாக போரூரில் இருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் மெட்ரோ வரையில் மெட்ரோ ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட உள்ளன. அனேகமாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என எதிர்பார்க்கலாம்.
இதில் பூந்தமல்லி டிப்போவிலிருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் மெட்ரோ வரையிலான நிலையங்களை எல் அண்டு டி நிறுவனம் உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் பாதையை அமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, கோடம்பாக்கம் மெட்ரோ நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரை, திருமயிலை மெட்ரோ நிலையம் தவிர, பூமிக்கு அடியில் உள்ள சுரங்க ரயில் நிலையங்களை ITD சிமென்டேஷன் இந்தியா என்ற நிறுவனம் கட்டமைத்து வருகிறது. இதில் கோடம்பாக்கம் மெட்ரோ மற்றும் லைட்ஹவுஸ் மெட்ரோ இடையேயான பூமிக்கு அடியில் செல்லும் மெட்ரோ பாதையில், பனகல் பார்க் மற்றும் லைட்ஹவுஸ் ஆகிய இரண்டு இடங்களில் கிராஸிங் வழி உள்ளது. இங்கு ரயில்கள் பாதைகளை மாற்றிக்கொண்டு பயணிக்க முடியும். இந்த இரண்டு இடங்களிலும் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் பனங்கல் பார்க் முதல் பூந்தமல்லி வரையிலான கோடம்பாக்கம் வரையிலான வழித்தடத்தில் 2027 ஆம் ஆண்டில் ரயில்களை இயக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளனர் . இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இயக்குனர் டி. அர்ச்சுனன் கூறும் போது, பனகல் பார்க் நிலையம் 319 மீட்டர் நீளம் கொண்ட கிராஸிங் வழியுடன் இருப்பதால், பூந்தமல்லி டிப்போவின் உயர்த்தப்பட்ட பாதையில் இருந்து பனகல் பார்க் வரை ரயில்களை எளிதாக இயக்க முடியும் என்றார்.
இதனிடையே லைட்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை (26.1 கி.மீ நீளம்) உள்ள வழித்தடத்தில் 2028ம் ஆண்டுக்குள் முழுமையாக ரயில்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது. அதேநேரம் பூந்தமல்லி டிப்போ முதல் போரூர் சந்திப்பு வரையில் இன்னும் சில மாதங்களில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications