சென்னைக்கு அருகே GLOBAL சிட்டி.. எங்கே வரப்போகுது தெரியுமா? மில்லியன் டாலர் கேள்விக்கு பதில்!
சென்னை: சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் 'குளோபல் சிட்டி' திட்டம் எங்கே வரும்? என்ற கேள்விதான் தற்போது தமிழ்நாட்டில் மில்லியன் டாலர் கேள்வி. கடந்த 2025-26 மாநில பட்ஜெட்டில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த பிறகு, சாமானியர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பலரும் எழுப்பிய மில்லியன் டாலர் கேள்வி இது.
சென்னைக்கு அருகில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய நகரத்தை உருவாக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (Tidco) நான்கு இடங்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த இடங்களின் பட்டியல் தற்போது மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ஃபின்டெக் மண்டலங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு நகரத்தை உருவாக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், சிறந்த போக்குவரத்து மற்றும் இணைப்பு வசதிகளையும் உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய நகரத்திற்கான இடங்கள்
இந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் நகரங்களின் வளர்ச்சி மிக வேகமாக இருப்பதால், சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய நகரத்திற்கான சிறந்த இடங்களைத் தேர்வு செய்ய இரண்டு ஆலோசகர்களை Tidco நியமித்தது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆலோசகர்கள் நான்கு சாத்தியமான இடங்களைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அந்த இடங்களின் பெயர்களை இப்போது வெளியிட முடியாது. ஒவ்வொரு இடத்தின் சாதக பாதகங்களையும் அவர்கள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் ஆரம்ப கட்ட ஆய்வறிக்கை மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது" என்றார்.
திட்டமிடப்பட்டுள்ள புதிய நகரத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ஃபின்டெக் மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கான அலுவலகங்கள் ஆகியவை அடங்கும்.
திட்டமிடலின் முக்கியத்துவம்
சென்னையின் புறநகரில் ஒரு உலகளாவிய நகரத்தை உருவாக்குவதற்கு விரிவான திட்டமிடல் அவசியம். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வணிகங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களை ஈர்ப்பதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். இது வீடுகள், கடைகள் மற்றும் பிற தொடர்புடைய வணிகங்களின் வளர்ச்சிக்கு உதவும். சரியான இடத்தை தேர்ந்தெடுத்து, அதை நன்கு திட்டமிடுவதன் மூலம், முதலீடுகளையும், திறமையான மனிதர்களையும் ஈர்க்கும் நகரமாக சென்னையை உருவாக்க முடியும்.
போக்குவரத்து இணைப்புகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் காரணமாக செங்கல்பட்டு மற்றும் பரந்தூர் ஆகியவை சிறந்த தேர்வுகளாக இருக்கலாம் என்று நகர திட்டமிடல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டு மற்றும் பரந்தூர்
செங்கல்பட்டு சாலை மற்றும் ரயில் வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ளது. பரந்தூர், வரவிருக்கும் புதிய விமான நிலையம் காரணமாக முக்கியத்துவம் பெறும். இது விமான நிலையத்தை மையமாகக் கொண்ட ஒரு நகரமாக (aerotropolis) மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரந்தூருக்கு எதிர்காலத்தில் மெட்ரோ ரயில் சேவையும், வெளி வட்ட சாலை வழியாக துறைமுகத்துடன் இணைக்கும் திட்டமும் உள்ளது. மேலும், இது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும் அமைந்துள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஆகியவையும் நல்ல தேர்வுகளாக இருக்கும். எண்ணூரில் இருந்து பூஞ்சேரி வரை ECR-ல் proposed 65 கி.மீ கடல் பாலம் வடக்கு மற்றும் தெற்கு சென்னையை இணைக்க உதவும். OMR-க்கு நாவலூர் வரை மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும். அதை மேலும் நீட்டிக்க முடியும் என்று அரசு தரப்பு கருதுகிறது.
2,000 ஏக்கர் நிலத்தை ஒரே இடத்தில் கண்டுபிடிப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கும். ஏனென்றால், பெரும்பாலான நிலங்கள் தனியார் சொத்துகளாக உள்ளன. அவற்றை வாங்குவதற்கு அரசாங்கம் அதிக இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும்.
க்ளோபல் சிட்டி எங்கே வருது?
சென்னையின் நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையில் மும்பையின் நவி மும்பை அல்லது பெங்களூரின் ஒயிட்ஃபீல்டு போலவே புதிய நகரத்தை உருவாக்க தமிழக அரசு விரும்புகிறது. ஆனால், இவ்வளவு பெரிய நிலத்தை சென்னைக்கு அருகே கண்டுபிடிப்பதே சவாலாக இருக்கும். இத்திட்டத்திற்காக அரசு ஏராளமான நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்திற்கு அப்பால் செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூரில் இந்த க்ளோபல் சிட்டி அமைக்கப்பட வாய்ப்புகள் இருக்கலாம் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருங்காட்டுக்கோட்டை, புல்லலூர், சூரை, தொடுகாடு, மேல்பாடி மற்றும் சோகண்டி ஆகிய பகுதிகளில் இந்த சிட்டி அமைக்கப்படலாம்.
புதிய நகரத்தில் ஐடி பூங்காக்கள், ஃபின்டெக் வர்த்தக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள் மற்றும் மாநாட்டு அரங்குகள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவை இடம்பெறும்.
குளோபல் சிட்டியில் உயர் வருமானம், நடுத்தர வர்க்கம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கான பல அடுக்கு குடியிருப்பு கட்டிடங்கள், அத்துடன் விரிவான சாலை நெட்வொர்க்குகள் அமைக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பம், பசுமை ஆற்றல் அமைப்புகள், கோ வொர்க்கிங் வேலை செய்யும் இடங்கள் மற்றும் நகர்ப்புற சதுக்கங்கள், நவீன உணவகங்கள், தனியார் மதுபான கொள்கை, பூங்காக்கள் போன்ற பொழுதுபோக்கு உள்கட்டமைப்புகள் ஆகியவை அமைக்கப்படும். சென்னையுடன் தடையற்ற இணைப்பை உறுதி செய்வதற்காக, முறையான சாலை நெட்வொர்க்குகள், விரைவுப் பேருந்து சேவைகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் உருவாக்கப்படும். இந்தியாவிலேயே மிகவும் நவீனமான நகரமாக இந்த பகுதி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications