விஜயகாந்த் ஃபார்முலாவை ஃபாலோ செய்யும் தவெக! 2026ல் வேலூரில் விஜய் போட்டியா?
சென்னை: தனது செல்வாக்கை நிரூபிக்க வட மாவட்டத்தில் இந்த ஒரு தொகுதியில் விஜய் போட்டியிட போவதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். மேலும் ஜூன், ஜூலை மாதத்தில் விஜய் முழு நேர அரசியல்வாதியாகவே மாறுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தற்போது சமூகவலைதளங்களில் விஜய் குறித்து இளைஞர்கள், கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு ஒரு தனி மவுசு இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
விஜய் கட்சி தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளில் மக்களை 2, 3 முறைதான் சந்தித்தார். அவர் பேசிய பேச்சுக்களை எல்லாம் ஆடியோவாக போட்டால் 25 நிமிடங்கள்தான் வரும், அவர் தெருவில் இறங்கி போராடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குழப்பங்கள்
கட்சியில் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. இந்த விஷயத்தை யாரும் சரி செய்யவில்லை. கோவையில் 18 கி.மீ. தூரத்தில் தங்கி ரோடு ஷோ செய்ய வேண்டியதற்கான காரணம் என்ன? இதெல்லாம் திட்டமிட்டுதான் செய்துள்ளார்கள். ஏனென்றால், தனது பலத்தை சாம்பிளாக காண்பிக்கத்தான்.
ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனாவே தவெகவை ஒழிப்பதற்காகவே வந்திருக்கிறார், அவர் திமுகவின் விசுவாசி என்றெல்லாம் விமர்சனங்கள் எழுகின்றன. திமுக அனுப்பிய ஸ்லீப்பர் செல். அவரை போய் விஜய் நம்புகிறாரே என்ற பேச்சுகளும் எழுகின்றன.
மதுரை மேற்கு
மதுரை மேற்கு என்பது முக்கியமான தொகுதி. பல தலைவர்கள் மதுரை மேற்கைத்தான் குறி வைப்பார்கள். பல கூட்டங்கள் அங்கு நடந்துள்ளன. அப்படிப்பட்ட மதுரை மேற்கு தொகுதியில் 1,10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள எங்கள் தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள் என போஸ்டர் ஒட்டப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
வேலூர்
எனவே மதுரை மேற்கு, வேலூர், விக்கிரவாண்டி, வேதாரண்யம் உள்ளிட்ட தொகுதிகளில் விஜய் போட்டியிடலாம் என சொல்லப்பட்டது. கூட்டணியை பொருத்தமட்டில் பாமக, தேமுதிக ஆகியோருடன் இணைந்து நாம் ஒரு புது கூட்டணியை ஆரம்பிக்க வேண்டும் என புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சொல்கிறார்களாம். ஆனால் விஜய் அதற்கு எதுவும் சொல்லவில்லை என்கிறார்கள்.
அதிமுக- பாஜக கூட்டணி
அதிமுக- பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி விரும்புகிறாராம். இதற்கு விஜய் எந்த பதிலையும் சொல்லவில்லையாம். இந்த நிலையில் விஜய் வடமாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
விக்கிரவாண்டி வி.சாலை
அதாவது விக்கிரவாண்டி வி. சாலையில் நடந்த தவெக மாநாட்டில் வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தாமதமாக கிளம்பியதால் தங்களால் டோல்கேட்டை கூட தாண்ட முடியவில்லை, நாங்களும் வந்திருந்தால் மாநாட்டுக்கு இன்னும் பெரிய பலமாக இருந்திருக்கும். எங்களை சரியாக வழிநடத்தவில்லையே என்றார்களாம்.
வேலூர் பூத் கமிட்டி
இந்த நிலையில்தான் வேலூரில் பூத் கமிட்டி கூட்டத்தில் விஜய் பங்கேற்க போவதாக சொல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றும் வடமாவட்டத்தில் விஜய்யின் செல்வாக்கை நிரூபிக்க வேலூரில் விஜய் போட்டியிடலாம் என்றும் அதற்கான ஆலோசனை கூட்டத்தைத்தான் விஜய் நடத்த போகிறார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் சொல்கிறார்கள்.
வடமாவட்டம் ஏன்?
வடமாவட்டத்தை விஜய் ஏன் தேர்வு செய்கிறார் என்றால், விஜயகாந்திற்கு வெற்றியை தேடி தந்ததே வட மாவட்ட ஓட்டுக்கள்தான். எனவே வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் வடமாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வேண்டும் என விஜய் விரும்புகிறாராம். இவ்வாறு செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications