தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுமா.. மின்சார ரயில்கள் ஓடுமா.. 29ம் தேதி தெரிய வரும்!
சென்னை: தமிழகத்தில் 8வது கட்ட நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் திறப்பு, கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு மற்றும் மத்திய அரசிடம் அனுமதி பெற்று மின்சார ரயில்கள் திறப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம்தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 8 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த 8 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் முதல் இரண்டு ஊரடங்கை தவிர மற்ற ஊரடங்குகளில் நிறைய தளர்வுகளை அரசு அறிவித்தது.
8வது கட்ட ஊரடங்கு வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது வேண்டாமா அல்லது புதிய தளர்வுகள் அறிவிக்கலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆலோசனை கூட்டம்
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

மருத்துவக்குழு
அப்போது, தமிழகத்தில் அக்டோபர் மாதம் 1ம் தேதியில் இருந்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளிப்பது குறித்த முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளை திறந்தால் என்ன நடவடிக்கைகள் கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.

மின்சார ரயில்
தற்போது கடைகள் திறக்கும் நேரம் இரவு 8 மணி என்று இருப்பதை இரவு 9 மணி வரை அனுமதிப்பது, பள்ளிகள் திறப்பது, சென்னையில் மின்சார ரயில்களை இயக்க மத்திய அரசிடம் கேட்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தளர்வுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

விவாதிக்கப்படும்
இதேபோல் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதுபற்றியும் விவாதிக்க வாய்ப்பு உள்ளது. அங்கு கொரோனாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

காணொலி காட்சி மூலம்
மருத்துவ குழுவினரை சந்திப்பதற்கு முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29ம் தேதி காலை சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சிதலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.அப்போது மாவட்டங்களின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications