இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் விடியல்.. சொந்த வீடு வழங்கும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரூ.32.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி விடுதிகள் மற்றும் சமூதாய கூடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாணவர்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்துள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள கல்வி, சுயதொழில், உட்கட்டமைப்பு மேம்பாடு பன்முகச் சிறப்பு விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்துள்ளார்.

மேலும், ரூ.138 கோடி மதிப்பீட்டில் கல்லூரிகளுக்கான நவீன விடுதி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட இருளர் பழங்குடியின பயனாளிகளுக்கு ரூ.78 கோடி மதிப்பிலான 943 புதிய வீடுகள் வழங்கி, அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலினத்தவர் புத்தொழில் நிதி திட்டம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் 776 பயனாளிகளுக்கு ரூ.62 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ஏற்கெனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஏராளமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ரூ.149 கோடியில் 133 மாணவர் விடுதிக் கட்டடங்கள், ரூ.165 கோடியில் 381 பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள், ரூ.30 கோடியில் பள்ளி, விடுதிகளுக்கு மின்னணு உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,70,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
அதேபோல மாணவர்களுக்கான மாதாந்திர விடுதி உணவுக் கட்டணம் பள்ளிகளுக்கு ரூ.1,400/- ஆகவும் கல்லூரிகளுக்கு ரூ.1,500/- ஆகவும் உயர்வு, ஆண்டுதோறும் ரூ.600 கோடி கல்வி உதவித்தொகை ஆகிய முன்னெடுப்புக்கள் மூலம் 10 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், ரூ.28 கோடியில் 61 சமுதாயக் கூடங்கள், வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் தாட்கோ மூலம் ரூ.152 கோடி மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 10,466 பேர் பயனடைந்துள்ளனர்.
நிலமற்றோருக்கு விவசாய நிலம் வாங்க தாட்கோ மூலம் ரூ.10 கோடி மானியத்துடனான கடன் உதவி, ரூ.18 கோடி செலவில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு வீட்டுமனைப் பட்டா. 1,796 பயனாளிகள் பயன். ரூ.350 கோடி செலவில் 5,800 பழங்குடியினர் குடும்பங்களுக்கும் 1,000 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கும் வீடு வழங்கப்பட்டிருக்கிறது என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications