சென்னை சங்கமம்.. மல்லர் கம்பத்தில் சாகசம் செய்த சிறுவன்.. ஒன்ஸ் மோர் கேட்டு பாராட்டிய மு.க.ஸ்டாலின்!
சென்னை: சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு நாளில், மல்லர் கம்பத்தில் ஏறி சாகசம் செய்து அசத்திய சிறுவனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்ஸ் மோர் கேட்ட வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து மல்லர் கம்பத்தில் சாகசம் செய்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக பண்பாட்டுத் துறை சார்பாக சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் சூழலில், நடப்பாண்டும் ஜன.13ஆம் தேதி தொடங்கியது. இதனை சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் கடைசி நாள் விழா நேற்று நடைபெற்றது. அண்ணா நகரில் உள்ள கோபுரப் பூங்காவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்டு ரசித்தார். அப்போது விழுப்புரத்தைச் சேர்ந்த கை கொடுக்கும் கை குழுவினர் சார்பாக மல்லர் கம்பம் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். அதேபோல் பம்பை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த இரு நிகழ்ச்சிகளை பார்த்து வியந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக மேடையேறி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கை கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தார். இதனால் கிராமியக் கலைஞர்களும் உற்சாகமடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது சிறுவன் ஒருவன், மல்லர் கம்பில் ஏறிய சாகசம் செய்ததோடு, ஸ்டைலாக மேடையில் நின்று கைகளையும், தொடையையும் தட்டி காட்டிய சம்பவம் அனைவரையும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து பொன்னாடை போர்த்திய போது அந்த சிறுவனிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீண்டும் அதுபோல் முஷ்டியை தட்டி செய்து காட்ட முடியுமா என்று கேட்டார்.
இதையடுத்து உடனடியாக அந்த சிறுவன், முஷ்டியை மடக்கி தொடையை தட்டி அந்த ஸ்டைலை மீண்டும் அரங்கேற்றினார். இதனால் அங்கிருந்த பலரும் கைகைளை தட்டி பாராட்டினார். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த சிறுவனிடம் ஒன்ஸ் மோர் கேட்ட வீடியோ சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications