தற்காலிக ஆசிரியர்கள், ஊழியர்கள் 60 வயது வரை பணியில் தொடரலாம்.. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு!
சென்னை : திமுகவின் வெற்றிக்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் காரணம் என ஜாக்டோ ஜியோ மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை தீவுத்திடலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீங்கள் அரசு ஊழியர்கள் நான் மக்களின் ஊழியன். அரசும் அரசியலும் இரண்டற கலந்தது அதனை யாராலும் பிரிக்கமுடியாது எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைத்து வகையான தற்காலிக ஆசிரியர்களும், பிற தற்காலிக பணியாளர்களும் 60 வயது வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.
சைன் போட்டுட்டு தான் மாநாட்டுக்கே வந்திருக்கேன்.. அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் குட் நியூஸ்!
ஜாக்டோ - ஜியோ மாநாடு
அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ மாநாடு இன்று மாலை சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 20,000க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "நீங்கள் தீவுத்திடலில் கூடியுள்ளீர்கள்; ஆனால் நீங்கள் தனித்திவீல் அல்ல. கோட்டையை உள்ளடக்கியது தான் உங்கள் தீவு. உங்களில் ஒருவனாக பெருமையோடு பூரிப்போடு நிற்கிறேன்.
நன்றி உணர்வோடு இருக்கிறேன்
நீங்கள் அரசு ஊழியர்கள் நான் மக்களின் ஊழியன். அரசும் அரசியலும் இரண்டற கலந்தது அதனை யாராலும் பிரிக்கமுடியாது. அரசு ஊழியர் மாநாட்டில் அரசியல் பேசவேண்டாம் என நினைத்தாலும் இங்கு பேசாமல் வேறெங்கு பேசுவது. 6-வது முறையாக ஆட்சியை பிடிக்க அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான் காரணம் அத்தகைய நன்றி உணர்வோடு நிற்கிறேன். நம்முடைய ஆதரவு முதல்வருக்கும் அரசிற்கு எப்போதும் உண்டு என தெரிவித்துள்ளீர்கள். இதற்காகவே நான் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்களும் நானும் வேறு வேறு அல்ல
நீங்கள் அதிக எதிர்பார்ப்போடு வந்துள்ளீர்கள். நானும் அதனை நிறைவேற்றும் இடத்தில் உள்ளேன். தி.மு.க அரசு உங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் என்பதை இப்போதும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்களே அழைப்பிதழில் அச்சிட்டுள்ளீர்கள்.. கொரோனா காலத்தில் நிதி நிலை சரியானது நம் கோரிக்கையை படிப்படியாக நிறைவேற்றுவார்கள் என கூறிவிட்டீர்கள். நீங்களும் நானும் வேறு வேறு அல்ல.
பல்வேறு திட்டங்கள்
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடிய போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதனை தி.மு.க அரசு அமைந்ததும் ரத்து செய்தோம். போராட்டக்காலத்தை பணிக்காலம் அறிவித்தோம். தாமதமின்றி ஊதியமும் வழங்கப்பட்டது; அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. பொங்கல் பரிசாக 500 ரூபாய் வழங்கப்பட்டது, அரசு ஊழியர்கள் இறந்த போது குடும்பத்தொகை உயர்த்தப்பட்டது. கோவிட் நோயால் 409 முன்களப்பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.98 கோடிக்கும் மேல் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. அதிலும், உயிர்காக்கும் அவசரத்தன்மை கொண்ட சிகிச்சைகளுக்கு சிகிச்சை பெற அனுமதி. கோவிட்-19 நோய்க்கான சிகிச்சைக்கு 10 லட்சம் வரை கட்டணமில்லாமல் சிக்கிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேடைக்கு வரும்போதே
இந்த மாநாட்டுக்கு வரும்போதே, உங்களது கோரிக்கையை சிலவற்றை நிறைவேற்றும் கோப்புக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டுத்தான் இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். அதன்படி, அனைத்து வகையான, தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும், 60 வயது வரை தொடர்ந்து பணிபுரியலாம். பல ஆண்டுகளாக பணிமாறுதலின்றி இருக்கும் இப்பணியாளர்களுக்கு, இணைய வழியில் இடமாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 15 முதல் நடத்தப்படும்.
தனியார் பள்ளிகளுக்கு தனியாக
ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தொடக்கக் கல்விக்கென மாவட்ட அளவிலான புதிய அலுவலர் பணியிடமும், தனியார் பள்ளிகளை நிர்வகிக்க தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள் அனைத்தையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தோடு முடிந்துவிடப் போவது இல்லை. வருங்காலங்களில் இன்னும் பல அறிவிப்புகள் வரும்.
அடுத்தும் வருகிறது
1500 கோடி ருபாய் மகளிர் இலவச பயணத்திட்டத்தில் செலவாகிறது; கூட்டுறவு கடன் தள்ளுபடி; காலை சிற்றுண்டித்திட்டம் துவங்கப்படவுள்ளது; நினைக்கும் திட்டங்களை செயல்படுத்த நிதி வருவாய் இல்லை; அதனை உருவாக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும் அதனை திறம்பட செய்துள்ளோம். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ஏப்ரல் - ஜூன் வளர்ச்சி அடைந்துள்ளோம்.
சொல்லாததையும் செய்வேன்
இது முழுமையாக நிறைவேறும் போது உங்கள் கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறும். உங்கள் துறை அமைச்சரிடமும் நேரிடையாக கோரிக்கைகளை தெரிவிக்கலாம். அதற்கான தீர்வு காணப்படும். உங்கள் கோரிக்கை நிச்சயமாக நிறைவேறும் வீண் போகாது. 10 ஆண்டுகளாக நிதி நிலை மோசமாக இருந்தது. இருப்பினும் நாங்கள் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்கிறோம்; உங்களில் ஒருவான சொல்கிறேன்.. உங்களால் உருவான அரசு என்றும் உங்களுக்கு துணை நிற்கும்" எனத் தெரிவித்தார்.