மதுரை கலைஞர் நூலக கட்டுமானம்.. 23 முறை விசாரித்த மு.க.ஸ்டாலின்.. சீக்ரெட்டை உடைத்த எ.வ.வேலு!
கலைஞர் நூலகம் கட்டுமானம் பற்றி மு.க.ஸ்டாலின் 23 முறை கேட்டுள்ளதாக எ.வ.வேலு கூறியுள்ளார்.
சென்னை: மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 23 முறை கேட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அதேபோல், பொதுப்பணித்துறையை பொறுத்தவரையில் முதல்வரும் தூங்குவது கிடையாது. எங்களையும் தூங்க விடுவது கிடையாது என்றும் கூறியுள்ளார்.
பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் கட்டட கலைஞர்களுக்கான நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள் மற்றும் செய்நுட்ப அறிவு பற்றிய ஒருநாள் பயிற்சி அடையாறில் நடைபெற்றது. அதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பொதுப்பணித்துறையின் அரசு முதன்மை செயலர் மணிவாசன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி செயலர் அபூர்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி வருகிறார். திராவிட கலாச்சாரத்தின் நீட்சியாக கட்டடக் கலையை கொண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

தாய் துறை பொதுப்பணித்துறை
165 ஆண்டுகள் கடந்து தாய் துறையாக பொதுப்பணித்துறை இருந்து வருகிறது. பொதுப்பணித்துறையில் தரம் இருப்பது மட்டுமல்லாமல், தரத்தோடு சேர்ந்து அழகும் இருக்க வேண்டும். அதற்கு நாம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இத்தகைய புதிய தொழில்நுட்பங்களை மாவட்ட நிர்வாகத்தில் இருந்து செயல்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி அனைத்து அலுவலக கட்டடமும் நம் மூலமாக கட்டப்படுகிறது. அதேபோல் காலநிலை மாறிக் கொண்டிருக்கிறது. தாத்தா காலத்தில் சுனாமியை பார்த்திருக்க மாட்டார்கள்.

35 ஆண்டுகள் அனுபவம்
ஆனால் நாம் சுனாமியை பார்க்கிறோம். இயற்கை சீற்றங்களை தாங்கும் சக்தி கட்டிடத்திற்கு இருக்க வேண்டும் என்றால் புதிய யுக்திகள் வேண்டும். பூகம்பம், சுனாமி, புயல் போன்றவற்றை தாங்கும் வகையில் அரசு கட்டிடம் கட்ட வேண்டும். புதிய யுக்திகளை புதிய தொழில்நுட்பங்களின் மூலம் பயன்படுத்துவோம். அதற்காகவே இந்த பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதுவரை இதுபோன்ற பயிற்சிகள் நடந்ததில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இதற்கு முன் சாலை பாதுகாப்பு தொடர்பான பயிலரங்கம் நடத்தினோம். ஒரு கட்டடத்தை ஆய்வு செய்தால், கட்டுமானத்தை பார்க்காமல் நேரடியாக ஆய்வகத்தில் சென்று கட்டிட தரத்தை பரிசோதனை செய்வேன். 35 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருப்பதால் எனக்கு கட்டுமானம் பற்றிய அனுபவம் உள்ளது.

கலைஞர் நூலகம்
300 ஆண்டுகள் கழித்தும் நமது கட்டடங்களை பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும். மழைநீர் வடிகால் மற்றும் சாலைகள் மேற்கொண்ட பணிகளை முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் பாராட்டினார்கள். பொதுப்பணித்துறையை பொறுத்தவரையில் முதல்வரும் தூங்குவது கிடையாது. எங்களையும் தூங்க விடுவது கிடையாது. முதல்வர் இதுவரை 23 முறை கலைஞர் நூலகத்தின் கட்டுமானத்தை பற்றி கேட்டுள்ளார். முதல்வர் எந்த திட்டத்தை எடுத்தாலும் தொடர் நடவடிக்கையில் இருப்பார். முதல்வர் என்ன நினைத்தோரோ, அதனை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

வைக்கம் போராட்டம் நினைவு கட்டிடம்
2024ல் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா காரணமாக துரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. கீழடி அருங்காட்சியகமும் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டுள்ளது. 200 கோடி மதிப்பில் தென்சென்னை பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா நினைவு கட்டிடம் கேரளாவில் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான கட்டுமான டெண்டர் விடப்பட்டு, கட்டுமானம் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைக்க உள்ளனர் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications