"தமிழக பட்ஜெட்" குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 திட்டம்.. அதிகாரிகளுடன் ஆலோசிக்கும் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை: மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம் குறித்து, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது. மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகளில் இந்த அறிவிப்பு மிக முக்கியமாகும்.
இந்த திட்டத்தை திமுக அரசு சொன்னபடி நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கு இந்த ஆண்டே மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000
அந்த அடிப்படையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் சட்டசபையில் தாக்கலாகும் பட்ஜெட்டில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்தார். இதையடுத்து இந்த திட்டத்தில் யார் யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை அரசு நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

தயாராகும் பட்டியல்
அதில் சொந்த வீடு இல்லாத அன்றாட வாழ்க்கைக்கு கஷ்டப்படும் குடும்பத் தலைவிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற விவரம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாட கூலி வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்றும், கணவனால் கைவிடப்பட்டவர்கள் உள்ளிட்டோரின் பட்டியலும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யார் யாருக்கு கிடைக்கும்?
அந்த வகையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பி.எச்.எச். என்ற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கும், பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய். என்ற அந்த்யோதயா அன்ன யோஜனா ரேசன் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கும் ரூ.1000 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை
இந்த நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம் குறித்தும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications