“இவர்கிட்ட சொன்னாலே இப்படித்தான்” குளிர்ந்து போய் பாராட்டிய முதல்வர் - அமைச்சர் ஆதரவாளர்கள் ஏக குஷி!
சென்னை : ஒரு கூட்டம் நடத்தி அதில் புத்தகம் வெளியிடுவோம். ஆனால், கூட்டங்கள் நடத்துவதையே தேதி வாரியாக போட்டு ஒரு புத்தகம் வெளியிடும் அளவுக்கு கூட்டங்கள் நடத்துபவர் யாரென்று கேட்டால் அவர் அமைச்சர் சேகர்பாபு தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மனம் விட்டுப் பாராட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சேகர்பாபுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சேகர்பாபுவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

கருணாநிதி பிறந்தநாள் விழா
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், 1300 மூத்த தி.மு.க முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு சிறப்பு செய்து, பொற்கிழி வழங்கினார். பின்னர் முதலமைச்சர் விழாவில் சிறப்புரையாற்றினார்.

விட்டால் ஒரு வருஷம் கூட
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், செயல்வீரர் சேகர்பாபு என வரவேற்பு பேச்சைத் தொடங்கினார். மேலும் பேசிய அவர், "பிறந்தநாள் கொண்டாடுவது என்பது, பிறந்தநாளுக்குரிய ஒருவர் எந்த தேதியில் பிறந்தாரோ அந்த தேதியில்தான் கொண்டாடுவது வழக்கம். ஆனால், நம்முடைய தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக, நம்முடைய அமைச்சர் சேகர்பாபு, ஒரு நாள் அல்ல, முப்பது நாள், நாற்பது நாள், ஐம்பது நாள் என விட்டால் அடுத்த பிறந்தநாள் வரும் வரை ஒரு வருடம் முழுக்கவும் கொண்டாடுவார்.

இயக்கத்திற்கு பெருமை சேர்க்க
தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3. என்னுடைய பிறந்தநாள் மார்ச் 1. கருணாநிதியின் பிறந்தநாளாக இருந்தாலும் சரி, என்னுடைய பிறந்தநாளாக இருந்தாலும் சரி அவர் எப்படி கொண்டாடுவார் என்றால் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் பெருமை சேர்ப்பதற்கு அல்ல, இந்த இயக்கத்திற்கு பெருமை சேர்க்க, இந்த இயகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கொண்டாடுவார். அப்படி கொண்டாடுவதுதான் அவரது வழக்கம்.

கூட்டங்களையே புத்தகமாக போடலாம்
ஒரு கூட்டம் நடத்துங்க என அவரிடம் சொன்னால், அவர் ஒரு கூட்டம் அல்ல, மாதம் முழுவதும் கூட்டம் நடத்துவார். அப்படித்தான் நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு கூட்டம் நடத்தி அதில் புத்தகம் வெளியிடுவோம். ஆனால், கூட்டங்கள் நடத்துவதையே தேதி வாரியாக போட்டு ஒரு புத்தகமாக வெளியிடும் அளவுக்கு கூட்டங்கள் நடத்துபவர் யாரென்று கேட்டால் அவர் அமைச்சர் சேகர்பாபு தான். நேற்று கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொங்கிவிட்டன. எப்போது முடியப்போகிறதென்று தெரியவில்லை." எனப் பேசினார்.

அமைச்சர் சேகர்பாபு
வட சென்னையைச் சேர்ந்த அமைச்சரான சேகர்பாபு முதல்வர் ஸ்டாலினுக்கு வலது கரமாகவே இருந்து வருகிறார். ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் எல்லா பொறுப்புகளையும் அவரே இறங்கி கவனித்து வருகிறார். முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் சேகர்பாபுவும் நெருக்கமாக இருந்து வந்த நிலையில், சென்னை மேயர் நியமனம், இந்து சமய அறநிலையத்துறையில் ஏற்பட்ட சர்ச்சைகள் ஆகியவற்றால் இருவருக்கும் இடையே கொஞ்சம் மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தது.

ஆதரவாளர்கள் குஷி
இந்நிலையில், கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழாவையொட்டி ஸ்டாலினே வியந்துபோகும் அளவுக்கு, சென்னை கிழக்கு மாவட்டம் முழுக்க கோலாகலமாக ஏற்பாடுகளைச் செய்து அசத்தியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு. இதனால் சேகர்பாபுவை முதல்வர் ஸ்டாலினும் மனம் திறந்து பாராட்டியுள்ளார். இதன்மூலம் அமைச்சர் சேகர்பாபு மீது ஸ்டாலினுக்கு இருந்துவந்த லேசான கோபம் தீர்ந்துவிட்டதாக சேகர் பாபுவின் ஆதரவாளர்கள் சந்தோஷமாக கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications