இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றியை தடுக்க நினைத்தார்கள்..'சகோதரர்' ராகுல் காந்திக்கு ஸ்டாலின் வாழ்த்து
இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்துள்ள ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்துள்ள ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரையின் வெற்றியை தடுக்க சிலர் முயற்சித்ததாக குற்றம்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அதிமுகவை சிலர் ஏலம் விட்டுக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.
அரசியல், நிர்வாகம், கொள்கைகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பின் கீழ் பதிலளித்துள்ளார்.
கடந்த முறை அக்டோபர் மாதத்தில் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் சமூக வலைதளங்களில் கட்சி, கொள்கை, பாஜகவுடனான உறவு உள்ளிட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். இம்முறை ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான மோதல், ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்றதற்கான காரணம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உள்ளிட்டவை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல.. இனி வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி.. மு.க.ஸ்டாலின் பதில்கள்
ஆளுநர் விவகாரம் பற்றி மு.க.ஸ்டாலின்
அதில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த நீங்கள், அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளலாமா? இது பின்வாங்கல் இல்லையா? என்ற கேள்விக்கு, ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. அன்று அவர் படித்தது அரசின் உரை. அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரை எந்த மாற்றமும் இல்லாமல் அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்பதுதான் தீர்மானம். அது ஏற்கப்பட்டு, அவையின் மாண்பும், மக்களாட்சி தத்துவமும் நிலைநாட்டப்பட்டது.
சமரசம் இல்லை
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலளித்து நான் பேசிய போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பை காக்க என் சக்தியை மீறி செயல்படுவேன் என்று குறிப்பிட்டேன். அதனைதான் இப்போது பதிலாகவும் சொல்ல விரும்புகிறேன். குடியரசு நாள் தேநீர் விருந்து என்பது நடைமுறை மரபு. அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பை காப்பதற்கான பண்பே தவிர, எந்த அரசியல் பின் வாங்கலோ, முன் வாங்கலோ, எந்த சமரசமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
குட்கா, பான் மசாலா தடை நீக்கம்
அதேபோல் பான் மசாகா, குட்கா ஆகிய போதைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி இருப்பது பற்றிய கேள்விக்கு, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும். ஏற்கனவே இருக்கும் சட்டங்களின் அடிப்படையில் அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 150 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைபொருட்களை ஒழிப்போம்
போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்டத்திருத்தம் கொண்டு வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக நீதிமன்றம் பாராட்டி இருக்கிறது. நிச்சயம் போதைப்பொருள் நடமாட்டத்தை அறவே ஒழிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
மதச்சார்பின்மை
தொடர்ந்து ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறதே என்பது பற்றிய கேள்விக்கு, சகோதரர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை குமரியில் இருந்து நான்தான் தொடங்கி வைத்தேன். அது மிகப்பெரிய வெற்றிபெறும் என்று அன்றைக்கே சொன்னேன். இந்த பயணத்தில் தேர்தல் மற்றும் கட்சி அரசியலை அவர் பேசவில்லை. இந்திய ஒன்றியத்தின் அமைதிக்கு என்றைக்கும் தேவைப்படும் மதச்சார்பற்ற கொள்கையை பேசி இருக்கிறார்.
ராகுலுக்கு வாழ்த்து
அதனால் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, ஒற்றுமை பயணத்தை வெற்றியடைய வைத்திருக்கிறது. அந்த வெற்றியை தடுக்க பார்த்தார்கள். உரிய பாதுகாப்பு வழங்காமல் இடையூறு ஏற்படுத்த பார்த்தார்கள். அதையெல்லாம் கடந்து இந்திய ஒற்றுமை பயணத்தின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் ராகுல் காந்திக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்கள்
தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு குறித்து மிகத் தீவிரமாக பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வருவது என்ற கேள்விக்கு, இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிய போது ரூ.318 கோடி மனித நேய அடிப்படையில் உதவிகளை தமிழ்நாடு அரசு செய்தது. அதேபோல் இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு பொறுத்தவரையில், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுகவை பொறுத்தவரையில் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு, இலங்கை வாழும் தமிழர்கள் விரும்பும் வகையில் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்பி-க்கள் இதனை வலியுறுத்துவார்கள் என்று தெரிவித்தார்.
ஊடகங்கள்
அதேபோல் ஊடகங்கள், சமூக ஊடகங்களை உன்னிப்பாக கவனித்து வரக்கூடிய தலைவர்களில் நீங்களும் ஒருவர். ஊடகங்களின் இன்றைய போக்கைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அன்றாட செய்திகளுக்காக செய்தித்தாள்கள் வாசித்தோடு தொலைக்காட்சிகளை தொடர்ந்து பார்ப்பேன். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களையும் கவனிப்பேன். அவற்றில் வரும் பிரச்சினைகளுக்கு சம்மந்தப்பட்ட அமைச்சர்களை தொடர்பு கொண்டு தீர்வு காண சொல்வது என் வழக்கம்.
அரசின் விளக்கங்களை ஒளிபரப்புவதில்லை
ஆனால் சில ஊடகங்கள் பிரச்சினைகளை ஒளிபரப்புகிறார்கள். அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கிறோம். பிரச்சினையை ஒளிபரப்பும் ஊடகங்கள், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் ஒளிபரப்ப வேண்டும். அதனை ஊடகங்கள் வெளிப்படுத்துவதே இல்லை. சில செய்தித்தாள்கள் கூட பிரச்சினைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அரசின் விளக்கங்களை போடுவதில்லை. இனி மாற்றிக் கொள்வார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவையே ஏலம் விடுகிறார்கள்
தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை பெங்களூருவில் ஏலம் விடுவது பற்றிய கேள்விக்கு, இங்கு சிலர் அவங்க கட்சியையே ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பதில் அளித்துள்ளார்.