முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் உடல்நிலையில் முன்னேற்றம்! அப்போலோவிற்கு குடும்ப உறவுகள் விசிட்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாரும், மறைந்த கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 9ஆம் தேதி அன்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடிய தயாளு அம்மாள் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே மறதி நோயாலும், வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளாலும் அவதிப்பட்டு வரும் அவர் உணவு ஒவ்வாமை காரணமாக நேற்றைய தினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தயாளு அம்மாள் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கி வருவதோடு தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். தயாளு அம்மாளுக்கு 90 வயது என்பதால் எல்லோருக்கும் போல் அவருக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அவரது உடல் எந்த மருந்தை ஏற்கும் எந்த மருந்தை ஏற்காது என்பதை ஆலோசித்து அதற்கேற்ப மருத்துவர்கள் மருந்துகளை கொடுத்து வருகின்றனர்.
தாயார் தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். நேற்றைய தினத்தைக் காட்டிலும் இன்று தயாளு அம்மாளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இதனிடையே குடும்ப உறவுகளும் அப்போலோ மருத்துவமனைக்கு விசிட் அடித்து தயாளு அம்மாள் உடல் நலம் பற்றி விசாரித்து வருகிறது. அம்மாவை பார்ப்பதற்காக மு.க.அழகிரி இன்று அப்போலோ மருத்துவமனைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications