திருவண்ணாமலை, திருச்செந்தூர் உட்பட.. 7 கோவில்களில் மருத்துவ மையங்கள்.. முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 7 கோவில்களில் மருத்துவ மையங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை புரியும் 10 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு கோவில்களில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதல் உதவி அளித்திடும் வகையில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், இரண்டு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை கொண்டு மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் இருந்து வந்தது
மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும்ம் வகையில் கடந்த 2021-22ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுகளுடன் கூடிய மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.

கோவில்களில் மருத்துவமையங்கள்
இந்த நிலையில் முதற்கட்டமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர் ட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு அவசர சிகிச்சை
இந்த மருத்துவ மையங்களில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்த மாணி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக செயல்படும்.

ரூ3 கோடி நிதி ஒதுக்கீடு
இப்பணிக்காக ஒரு மருத்துவ மையத்திற்கு ஓராண்டிற்கு சுமார் ரூ.30 லட்சம், வீதம் 10 கோயில் மருத்துவ மையங்களுக்கு மொத்தம் ரூ.3 கோடி கோயில் நிதியிலிருந்து செலவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கோயில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் திறப்பு
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அற நிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் கோவில்கள் அமைந்துள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications