அளவோடு குழந்தைகள் பெற்று.. அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்! மணமக்களுக்கு ஸ்டாலின் அறிவுரை!
சென்னை: அளவோடு குழந்தைகள் பெற்று அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என மணமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும், மத்திய மாநில அரசுகள் குடும்பக் கட்டுப்பாட்டிற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக தஞ்சை மாவட்ட திமுக நிர்வாகி இல்ல விழாவில் அவர் பேசியதாவது;

குடும்பக் கட்டுப்பாடு
மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை வாழ்த்துகிற நேரத்தில் நான் நிறைவாகச் சொல்ல விரும்புவது, நீங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு - அதற்காக அவசரப்பட்டுவிட வேண்டாம் - அளவோடு பெற்று, வளமோடு வாழ வேண்டும் என்பதுதான் நம்முடைய முறை. இன்றைக்கு ஒன்றிய அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி - குடும்பக் கட்டுப்பாட்டிற்காகப் பல கோடி ரூபாய் செலவு செய்து பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அது உங்களுக்குத் தெரியும். அதற்காக நிதி ஒதுக்கீடு எல்லாம் செய்திருக்கிறார்கள்.

தமிழ் பெயர்கள்
அதனால் நீங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு - அளவோடு பெற்றாலும் - அந்தக் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுகள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் தமிழுக்குத் தலைவர் கலைஞர் அவர்கள் எவ்வாறெல்லாம் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

மணமக்களுக்கு வேண்டுகோள்
இன்றைக்கு இந்தத் திருமணம் சுயமரியாதை உணர்வோடு நடக்கிறது என்றால், இது வெறும் சுயமரியாதைத் திருமண மட்டுமல்ல, சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, தமிழ்த் திருமணம். அதையும் மறந்து விடக்கூடாது. இந்தத் தமிழுக்குதான் தலைவர் கலைஞர் அவர்கள் செம்மொழி என்கிற அங்கீகாரத்தை பெற்று தந்திருக்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட இந்த அழகான தமிழ் மொழியில் பெயர் சூட்டுங்கள். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

அதிமுக மீது
இதனிடையே திருமண விழாவில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மட்டும் பெரிதாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக குறித்தோ எடப்பாடி பழனிசாமி பற்றியோ எதுவும் பேசாதது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications