வெளியூர் சுற்றுப்பயணங்களை தவிர்க்கும் முதல்வர் ஸ்டாலின்! அன்றே சொன்னது ஒன் இந்தியா தமிழ்!
சென்னை: உடல்நலம் காரணமாக திருச்சி மாவட்ட சுற்றுப்பயணத்தை தவிர்த்து, காணொலி மூலம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
''வெளியூர் பயணங்களை தற்காலிகமாக தவிருங்கள்! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டாக்டர்கள் அன்புக்கட்டளை!'' என்ற தலைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஒன் இந்தியா தமிழ் வெளியிட்ட செய்தியில் இது குறித்து விரிவாக விவரிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று திருச்சி ஜமால் முகமது கல்லூரி நிகழ்ச்சியில் சென்னையில் இருந்தவாறே காணொலி மூலம் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவர்கள் அறிவுரைப்படி வெளியூர் சுற்றுப்பயணத்தை தவிர்த்திருப்பதாக கூறியிருக்கிறார்.
வெளியூர் பயணங்களை தற்காலிகமாக தவிருங்கள்! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டாக்டர்கள் அன்புக்கட்டளை!
திருச்சி மாவட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும் நாளையும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றுவிட்டு நாளை முக்கொம்பில் புதிய தடுப்பணையை திறந்து வைக்க திட்டமிட்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் ஒன் இந்தியா தமிழ் ஏற்கனவே கூறியிருந்ததை போல், மருத்துவர்கள் அறிவுரை காரணமாக நேரடி வெளியூர் சுற்றுப்பயணத்தை தவிர்த்துவிட்டார்.
ஸ்டாலின் பேச்சு
இதனிடையே இன்று திருச்சி ஜமால் முகமது கல்லூரி முப்பெரும் விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 5, 6 நாட்களாக காய்ச்சல் இருந்ததால் தன்னை மருத்துவர்கள் தற்காலிகமாக வெளியூர் சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள் என்றும் அதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சியில் தன்னால் நேரில் கலந்துகொள்ள இயலவில்லை எனவும் தெரிவித்தார்.
மூடி மறைக்காமல்
தனக்கு காய்ச்சல் வந்தது, அதனால் தான் வெளியூர் பயணங்களை தவிர்க்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் ஒளிவுமறைவின்றி தனது உடல்நிலை பற்றி தெரிவித்திருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். ஒன்றுமில்லை ஒன்றுமில்லை எனக் கூறி மூடி மறைக்க விரும்பாமல், உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக மக்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் அவர் தெரிவித்திருப்பது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
2 அமைச்சர்கள்
இதனிடையே திருச்சியின் அடையாளமாக திகழும் ஜமால் முகமது கல்லூரியில் படித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட 2 பேர் இப்போது அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். தன்னை திருச்சி வரவழைக்க வேண்டும் என அமைச்சர் நேரு ஆசைப்பட்டார் என்றும் ஆனால் மருத்துவர்கள் அறிவுரை காரணமாகவே திருச்சிக்கு நேரில் வர இயலவில்லை எனவும் தெரிவித்தார்.