நபிகளாரின் போதனைகள்; நாம் கடைபிடிக்க வேண்டிய கருத்து கருவூலங்கள்; முதலமைச்சர் மீலாது நபி வாழ்த்து..!
சென்னை: நபிகள் பெருமானாரின் போதனைகள் அனைத்தும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கருத்து கருவூலங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்லாமியர்களுக்கு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்;
நபிகள் நாயகம் அவர்கள் இளம் பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும் வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்.

ஏழை எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளத்திற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும் அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
அண்ணல் நபிகளின் வழிகாட்டுதலை முழுமையாக கடைபிடித்து வாழும் இஸ்லாமியம் சமுதாயத்தின் பால் எப்போதும் திமுகவுக்கும் மக்களால் அமையப்பெற்ற கழக அரசுக்கும் இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன் மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருக்கிறார்.

இதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
இறை தூதரான நபிகள் நாயகம் தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய வரலாற்றுப் பெருமைமிக்கவர். நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள், மீலாது நபி திருநாளாக உலகம் முழுவதும் வாழ்கிற இஸ்லாமிய பெருமக்களால் மிகுந்த பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
மதச்சார்பற்ற கொள்கைகளில் நம்பிக்கையுள்ள கட்சிகள் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுத்து பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு வருகின்றன. இருந்தாலும், மிகமிகச் சோதனையான காலகட்டத்தில் இவர்கள் வாழ வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த கவலையைத் தருகிறது.
நபிகள் நாயகம் போதனைகளின்படி, அனைத்து மக்களிடையேயும் அன்பையும், ஏழை, எளிய மக்களிடம் பரிவையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் வகுப்புவாத சக்திகளின் பிளவு அரசியலை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கே.எஸ்.அழகிரி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications