திட்ட ஆரம்பத்தில் மட்டும் ஆர்வமாக இருந்தால் போதாது! அரசு அலுவலர்களுக்கு ஸ்டாலின் ஸ்ட்ராங் மெசேஜ்!
அரசின் முயற்சிகளுக்கு அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்க ஸ்டாலின் வேண்டுகோள்.
சென்னை: தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் அரசின் முயற்சிகளுக்கு அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் (Priority Schemes) தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக அவர் அந்தக் கூட்டத்தில் பேசியதாவது;

துறை திட்டங்கள்
எந்தத் துறையின் திட்டமாக இருந்தாலும், அது மக்களை மேம்படுத்துவதாக அமைந்திருக்கிறது. சமூகப் பொருளாதாரக் குறியீட்டில், உலகளவில் தலைசிறந்து விளங்கும் வகையில் திட்டங்களைத் தீட்டி வருகிறோம். இன்றைய தேவைகளுக்காக மட்டுமல்ல, எதிர்காலத்தை மனதில் கொண்டும் இவை அமைந்துள்ளன. அரசின் ஒவ்வொரு துறையும் ஒரு குறிப்பிட்ட இலக்கோடு, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஏற்றத் தாழ்வற்ற வாழ்க்கை முறையை அமைப்பதற்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

ஆரம்பத்தில் மட்டும் ஆர்வம்
இந்தத் திட்டங்களைச் சீரிய முறையில் செயல்படுத்தினால், நிச்சயமாக நமது மாநிலம் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் ஒளிரக்கூடிய வகையில் அமையும். எந்தத் திட்டமாக இருந்தாலும், அந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது இருக்கிற ஆர்வம், அதனை நிறைவேற்றி முடிப்பது வரை இருக்க வேண்டும். அதற்குத்தான் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

முத்திரைத் திட்டங்கள்
மக்களைச் சென்றடையும் திட்டங்களை "முத்திரைத் திட்டங்கள்" என துறைவாரியாகத் தொகுத்து, அவற்றின் முன்னேற்றத்தையும் கடந்த மாதம் உங்களுடன் விவாதித்தேன்.தலைமைச் செயலகத்தோடு ஆய்வுகளை நிறுத்திக் கொள்ளாமல், "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற பயணத்தையும் மேற்கொண்டு வருகிறேன்.இந்த ஆய்வுகளின்போது, அரசின் பல திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் பொதுவான நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும், சில நிகழ்வுகளில், கள அளவில் இன்னும் கவனம் தேவை என்பதை அறிய முடிந்தது.

முன்னுரிமைத் திட்டங்கள்
மக்கள் என்னிடம் நேரடியாக அளிக்கும் மனுக்களிலும் அத்தகைய எதிர்பார்ப்பை அறிய முடிந்தது. அதனால் தான் முன்னுரிமைத் திட்டங்கள் என்ற வகையில் தற்போது செயல்பாட்டில் உள்ள மிக முக்கியமான திட்டங்களைத் துறைவாரியாகத் தொகுத்து, அவற்றின் தற்போதைய முன்னேற்றத்தை அறியும் நோக்கில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிறந்த மேலாண்மைக்கு அடையாளமாக, 'What gets measured, gets done' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள், திட்டங்களின் வெற்றிக்கும், மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும்.

கள ஆய்வு
மேலும், அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவும் இதுபோன்ற கூட்டங்கள் உதவும் என நான் நம்புகிறேன். அரசுச் செயலாளர்களைப் பொறுத்தவரையில், உங்களது துறை அலுவலர்களின் பணியினை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், மாதந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - மக்களைச் சந்திக்க வேண்டும் - உண்மைகளை அறிய வேண்டும். அப்போதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கமானது முழுமையடையும்.

நமக்கு மட்டும் சிறந்த நோக்கங்கள்
நமக்கு மட்டும் மிகச்சிறந்த நோக்கங்கள் இருந்தால் போதாது; அவை திட்டங்களைச் செயல்படுத்தும் அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்படும்போதுதான், அந்தத் திட்டங்களின் நோக்கமும் நிறைவேறும்; பயனும் முழுமையாக மக்களுக்குக் கிடைக்கும்.அதனை நீங்கள் கவனத்தில் கொண்டு பணியாற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், நிலுவையிலுள்ள அனைத்துப் பணிகளையும், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக முடிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications