அட எத்தனை வண்டிகள் வந்தால் என்னங்க.. TVS 50ஐ யாராலும் அடிச்சுக்க முடியாது! ஸ்டாலின் புகழாரம்!
சென்னை: இன்றைக்கு புதிது புதிதாக எத்தனையோ இரு சக்கர வாகனங்கள் வந்தாலும் TVS 50 க்கு நிகராக எந்த டூவிலரும் கிடையாது என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
TVS 50யை பொறுத்தவரை ஏழை - எளிய சிறு வியாபாரிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றிய ஒளிவிளக்கு என்று குறிப்பிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற டிவிஎஸ் குழும நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது;

TVS நிறுவனம்: தமிழ்நாட்டின் தொழில்துறை அடையாளங்களில் TVS முக்கியமானது என்பதை யாரும் மறக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது. TVS நிறுவனத்தை பற்றி நான் உங்களுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டினுடைய தொழில் முகத்தை காட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒரு முகமாக - டி.வி.எஸ். நிறுவனத்தைக் காட்டலாம். இதற்கு அடித்தளம் அமைத்தவர் தொழில் மேதைகளில் ஒருவரான டி.வி.சுந்தரம்.
TVS - 50 : இன்றைக்கு லட்சக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் எத்தனை வந்தாலும் ஏழைகளுக்கான வாகனமாக இருந்தது TVS - 50 வாகனம் தான். ஏழை - எளிய சிறு வியாபாரிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றிய ஒளிவிளக்கு அந்த வாகனம். தென் மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களுக்குள் முதலில் சென்ற வாகனம் TVS தான். இதை உருவாக்கியவர் திருக்குறுங்குடி வெங்கராம் சுந்தரம். டி.வி.சுந்தரம் குரூப்ஸ் நிறுவனங்களை உருவாக்கிய தொழில்துறை மேதை அவர்.
டி.வி.சுந்தரம்: வழக்கறிஞராக இருந்து தொழிலதிபர் ஆனவர் அவர். திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கத்தில் உரையாற்ற வந்த வழக்கறிஞர் நார்டன் உரையைக் கேட்டு தொழில்துறையில் இறங்கினார் டி.வி.சுந்தரம். 1912-ஆம் ஆண்டு மதுரையை மையமாக கொண்டு பேருந்து சேவையை தொடங்கினார். தஞ்சாவூர் - புதுக்கோட்டை தான் அவர் முதன்முதலாக பேருந்து இயக்கிய வழித்தடம். அந்தக் காலத்தில் சரியான சாலை வசதிகள் இல்லை. அதனால் சாலைகள் போடுகிற ஒப்பந்தத்தையும் எடுத்தார்.
டிவிஎஸ் குழுமம்: சாலைகளில் இரும்பு ஆணிகள், மாட்டு லாடம் அதிகம் கிடக்கும். இதனால் பேருந்து டயர் பஞ்சர் ஆகும். எனவே இதை முன்கூட்டியே எடுக்க காந்த வாகனத்தையும் வைத்திருந்தார். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வந்தது. உடனே கரிவாயு மூலம் வாகனத்தை இயக்குகிற பங்க் வைத்தார். பேருந்து இயக்குவது - பாகங்களை தயாரிப்பது - வாகனங்களை உருவாக்குவது போன்ற கிளைத் தொழில்கள் எல்லாவற்றையும் தொடங்கியதால்தான், இன்றைக்கு 80 நாடுகளில் டி.வி.எஸ் நிறுவனம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும் மொபெட் : சைக்கிள் போல ஒவ்வொரு வீட்டிலும் மொபெட் இருக்க வேண்டும் என்று சொல்லி - அதை சாதித்துக் காட்டியவர் டி.வி.எஸ். சீனிவாசன். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயும் ஓசூர் தொழிற்சாலையை உருவாக்க கடுமையாக உழைத்தார். துணிச்சலாக ரிஸ்க் எடுக்கக் கூடியவர். தொழிலாளர்களோடு தொழிலாளராக இருந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications