வைகோவை திடீரென சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. கொரோனாவில் இருந்து வைகோ மீண்ட நிலையில் நலம் விசாரித்தார்
சென்னை : கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து குணமடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு பின்னர் திடீர் எழுச்சியை சந்தித்தது.
நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் மக்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில், 2வது அலையை விட 3வது அலை வேகமாக இருந்தது. சினிமா அரசியல் பிரபலங்கள் விதிவிலக்கு இல்லாமல் அதிகளவு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
இந்நிலையில் கடந்த ஜனவரி மாத இறுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். சில நாட்களாக கடுமையான காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த வைகோ கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் , வைகோ தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். வீட்டில் இருந்தபடியே அவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றார்.

கொரோனா உறுதி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் திமுக உடன் வார்டு பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்கள் நேரில் அண்ணா அறிவாலயம் நேரில் சென்று பேசிய நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வைகோவிர்கு பதில் அவரது மகன் துரை வைகோ கலந்து கொண்டு பேசி தங்களுக்குத் தேவையான இடங்களைக் கேட்டுப்பெற்றார்.

வீட்டிலிருந்தே சிகிச்சை
வைகோவுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும், பின்னர் அது அதிகரித்து சளி தொல்லை அதிகமானதால் தனிமைப்படுத்திக் கொண்ட வைகோ, வீட்டில் இருந்தபடியே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்து- மாத்திரைகளை உட்கொண்டு வந்த அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்தபோது கொரோனா இல்லை என தெரியவந்தது. இருந்தும் வைகோ பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார்.

முதல்வர் சந்திப்பு
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென நேரில் சந்தித்து பேசினார். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைகோவை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், கொரோனால் பாதிக்கப்பட்ட வைகோவின் உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், வைகோவில் மகன் துரை வைகோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications