சிந்து சமவெளி கண்டுபிடிப்பின் 100வது ஆண்டு! ஜான் மார்ஷலுக்கு நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சிந்து சமவெளி திராவிட நாகரிகம் என்கிற கண்டுபிடிப்பு, இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், இந்த கண்டுபிடிப்பை நான் நன்றியுடன் திரும்பி பார்க்கிறேன் என்று ஜான் மார்ஷல்-க்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
ஆங்கிலேய தொல்லியல் துறை அதிகாரியான சர் ஜான் மார்ஷல், ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் அறிக்கையை 20 செப்டம்பர் 1924இல் வெளியிட்டார். அந்த அறிக்கையில் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருப்பதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளது என்பதை உலகுக்கு அறிவித்தார். இந்த அறிவிப்பு செய்து நூறு ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஆய்வை மேற்கோள் காட்டி, "இந்தியாவின் வடமேற்கு பகுதியில் சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது. காலநிலை மாற்றத்தால் அங்கிருந்த மக்கள் மெல்ல இந்தியா முழுக்க பரவினர். இந்த காலத்தையும், சங்க இலக்கிய காலத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டும் ஒரு புள்ளியில் இணைகிறது" என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
இப்படி இருக்கையில் இந்த கண்டுபிடிப்பின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர் ஜான் மார்ஷல்-க்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது x தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, 20 செப்டம்பர் 1924 அன்று, சர் ஜான் மார்ஷல் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார். இதனை நான் நன்றியுடன் திரும்பிப் பார்த்து, அவருக்கு கூறுகிறேன்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை சர்வதேச மாநாடு நடத்தி, சர் ஜான் மார்ஷலின் உருவ சிலையை தமிழகத்தில் நிறுவப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது" என்று கூறியுள்ளார்.
அதேபோல சிந்து சமவெளி கண்டுபிடிப்பின் நூற்றாண்டு குறித்து x தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் டிஆர்பி ராஜா, "சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். சிந்துவெளிப் பண்பாட்டு அகழாய்வு முடிவுகள் குறித்து இந்திய தொல்லியல் துறையின் தலைவராக இருந்த சர் ஜான் மார்ஷல் அவர்கள் சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு 20-9-1924 அன்று முதன்முதலில் அகழாய்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இது திராவிட நாகரிகம் என நிறுவினார்.
அதனை நினைவு கூர்ந்திடும் வகையில் திராவிட நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சார்பில் பன்னாட்டு அறிஞர்கள் கலந்துகொள்ளும் வகையில் சென்னையில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்படும் என்று 2024-25 நிதிநிலை அறிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்பதற்கு வசதியாக சிந்துசமவெளி பண்பாட்டுக் கருத்தரங்கம் விரைவில் நடைபெறவிருக்கிறது என்று இப்போது நமது முதலமைச்சர் அவர்களும் அறிவித்துள்ளார்.
சர் ஜான் மார்ஷலின் பணியையும் அவர் நினைவையும் போற்றும் வகையில் விரைவில் அற்புதமான சிலை ஒன்றும் முக்கிய இடத்தில் அமையும்" என்று கூறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications