பிரதமர் மோடியை சந்தித்து நன்றி கூறுகிறார் முதல்வர் ஸ்டாலின்! ஆகஸ்ட் 16 ஆம் தேதி டெல்லி பயணம்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டதற்காக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதற்காக நாளை மறுதினம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்தப் பயணத்தின் போது நீட் தேர்வு விலக்கு உட்பட சில முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் முன் வைப்பார் எனத் தெரிகிறது.

செஸ் ஒலிம்பியாட்
2022-ஆம் ஆண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியை, உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. எனவே இந்தப் போட்டியைத் தங்கள் நாடுகளில் நடத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த முயற்சிகளை மேற்கொண்டது. இதனிடையே அந்த தருணத்தில் தமிழக அரசு எடுத்த சில துரித நடவடிக்கைகளால் மற்ற மாநிலங்களை புறந்தள்ளி அந்த வாய்ப்பு சென்னைக்குக் கிடைத்தது.

23 குழுக்கள்
இதையடுத்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த 23 குழுக்கள் அமைத்து உத்தரவிட்ட முதல்வர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாள் தவறாமல் கேட்டறிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் போட்டி நிறைவடைந்தது. எந்தவித சிறு குறைகளோ, புகார்களோ, சலசலப்புகளோ ஏற்படாத வண்ணம் போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தது தமிழக அரசு.

பிரதமர் பாராட்டு
இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச்சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து போட்டியில் பங்கேற்றவர்களை வரவேற்று நமது மகத்தான கலாச்சாரத்தையும், விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்.'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி தெரிவிக்க
பிரதமரின் பாராட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதில் பதிவு வெளியிட்டார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டதற்காக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் வகையில் நாளை மறுதினம் டெல்லிக்கு செல்லவுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்தப் பயணத்தின் போது நீட் தேர்வு விலக்கு, நிதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றியும் பிரதமரிடம் அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழைப்பிதழ்
கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் ஸ்டாலினால் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழா அழைப்பிதழை பிரதமரிடம் வழங்க செல்ல முடியவில்லை. இந்நிலையில் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் செல்வது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications