தை 1 வாழ்த்து பெற வந்தவர்களுக்கு பரிசாக ரூ.100! கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் முதல்வர்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பண்டிகையை ஒட்டி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
வழக்கமான வெள்ளை வேட்டை சட்டையை தவிர்த்து, பட்டு வேட்டியும் நீல நிற சட்டையும் அணிந்து பொங்கலை உற்சாகமாக கொண்டாடியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முன்னதாக தை முதல் நாள் வாழ்த்து பெறுவதற்காக தனது இல்லம் வந்த நிர்வாகிகளுக்கும், கட்சிக்காரர்களும் பொங்கல் பரிசாக ரூ.100 பணம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
உதயசூரியனை வணங்கி.. சாதி, மதம் கடந்து பொங்கல் கொண்டாடுவோம் -பட்டு வேட்டி சட்டையில் ஸ்டாலின் வாழ்த்து
பொங்கல் பண்டிகை
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை எந்த பண்டிகையை கொண்டாடுகிறாரோ இல்லையோ ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மிக உற்சாகமாக கொண்டாடுவார். குடும்பத்தினருடன் சேர்ந்து பொங்கல் வைத்து மகிழ்ந்து, புத்தாடைகள் அணிந்து வாழ்த்துக்களை பரிமாறி பொங்கல் நன்னாளை சிறப்பாக கொண்டாடுவார். இந்நிலையில் இந்தாண்டும் வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் கொண்டாடிய அவர் தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மரியதை செலுத்தினார்.
ரூ.100 பணம் பரிசு
அதைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்கு சென்று தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா, உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர். இதனிடையே தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து பெற வேண்டி தனது இல்லத்தில் தன்னை சந்திக்க வந்தவர்கள் அனைவருக்கும் பரிசாக ரூ.100 வழங்கினார்.
கட்சிக்காரர்கள் குவிந்தனர்
பொங்கலன்று இது போல் கட்சிக்காரர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் 10 ரூபாய் சலவை நோட்டுக்களை பரிசாக வழங்குவது கருணாநிதியின் வழக்கமாகும். இதனால் அவரது பாணியில் முதல்வர் ஸ்டாலினும் பொங்கல் பண்டிகை அன்று சலவை ரூபாய் நோட்டுக்களை பரிசாக கொடுத்து வருகிறார். ஸ்டாலினிடம் இந்த ரூபாய் நோட்டை பெறுவதற்காக கட்சிக்காரர்கள் பலரும் காலையிலேயே முதல்வர் இல்லம் முன்பு குவிந்துவிட்டனர்.
காவலர் குடியிருப்பு
இதனிடையே சென்னை கொண்டித்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்பில் காவலர்கள் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் பொங்கல் விழா கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார்.