விஜய் டெல்லி பயணம் உறுதி.. மோடி தரும் அப்பாயிண்ட்மெண்ட்.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தகட்டப் பரபரப்பை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், விரைவில் டெல்லி செல்லவிருப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. எனினும், அவரது பயணத்திற்கான அதிகாரப்பூர்வத் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணத்தின் பின்னணியில் வெறும் அரசியல் ரீதியான சந்திப்புகள் மட்டுமின்றி, தமிழகத்தின் மிக முக்கியப் பொருளாதாரத் தேவைகளும் அடங்கியுள்ளன என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

நிதி நெருக்கடியும் அதிகாரிகளின் ஆலோசனையும்:
கடந்த திராவிட முன்னேற்றக் கழக (திமுக) ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிப்பதுதான் தற்போதைய புதிய அரசுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. இந்த இக்கட்டான நிதிச் சூழலை எப்படிக் கையாள்வது என்பது குறித்து, கடந்த வாரம் நிதித்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் அவசர ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நிலுவையில் உள்ள திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவும் மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதுதான் ஒரே வழி என்று அதிகாரிகள் தரப்பில் திட்டவட்டமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து, தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தொடக்கத்தில் இந்த யோசனையை ஏற்பதற்கு முதலமைச்சர் விஜய் சற்றே தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. "மத்திய அரசைச் சார்ந்திருக்காமல், இந்த நிதிச் சிக்கலைத் தீர்க்க வேறு ஏதேனும் மாற்று வழிகளை நாம் தேட முடியாதா?" என்று அதிகாரிகளிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த நிதித்துறை அதிகாரிகள், "தற்போது புதிய பட்ஜெட் (வரவு செலவுத் திட்டம்) தயார் செய்ய வேண்டிய கட்டாயச் சூழலில் நாம் இருக்கிறோம். எனவே, குறுகிய காலத்திற்குள் மாற்று வழிகளைக் கண்டறிந்து நிதி திரட்டுவது என்பது உடனடியாகச் சாத்தியமில்லை" என்கிற தொணியில் தங்களின் சூழலை விளக்கியுள்ளனர்.
டெல்லி பயணத்திற்கான ஏற்பாடுகள்:
நிதித்துறை அதிகாரிகளின் விரிவான விளக்கத்தையும், யதார்த்தமான பொருளாதாரச் சூழலையும் புரிந்துகொண்ட முதலமைச்சர் விஜய், இறுதியாக அவர்களின் ஆலோசனைக்குக் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு, அதற்கான ஆரம்பகட்டப் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன.
தமிழக அரசின் சார்பில், பிரதமர் அலுவலகத்தை (PMO) தொடர்புகொண்டு முதலமைச்சரின் சந்திப்பிற்கான நேரம் (Appointment) கேட்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி தற்போது பல்வேறு அரசு முறை நிகழ்வுகளிலும், அரசியல் பணிகளிலும் மிகவும் பிஸியாக இருப்பதால், தமிழக அரசின் இந்த கோரிக்கை இன்னும் பரிசீலனையிலேயே இருப்பதாகத் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் நேரம் கிடைத்தவுடன், பயணத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு - அரசியல் பரபரப்பு:
முதலமைச்சர் விஜய்யின் இந்த டெல்லி பயணம் வெறும் நிதி கோருவதற்கான பயணமாக மட்டும் அமையப்போவதில்லை; மாறாக, அது தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கியப் பயணமாக இருக்கும் என்கிறார்கள் தவெகவின் மூத்த நிர்வாகிகள்.
இதற்கிடையே, தமிழக அமைச்சரவையில் காங்கிரஸைச் சேர்த்துக் கொண்டதற்காக, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, நேற்று இரவு முதலமைச்சர் விஜய்யைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்தச் சுமுகமான உரையாடலின் போது, "நான் விரைவில் டெல்லிக்கு வரவிருக்கிறேன். அப்போது உங்களையும், அன்னை சோனியா காந்தி மேடத்தையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன்" என்று விஜய் கூறியுள்ளார்.
இதனால், டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், ஒருபுறம் பாஜாக தலைமையிலான மத்திய அரசிடம் தமிழகத்திற்கான நிதியைப் பெறப் பேச்சுவார்த்தை நடத்தினாலும், மறுபுறம் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே போன்றோரைச் சந்திக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த முரண்பாடான சந்திப்புகள் மற்றும் கூட்டணி அரசியல் நகர்வுகள், டெல்லி அரசியல் வட்டாரத்திலும் தமிழகத்திலும் புதிய விவாதங்களையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications