செங்கல்பட்டில் திமுக பற்றி அதை கேட்டதுமே.. வைகோ செம டென்ஷன்.. தவெக விஜய் பற்றி சொன்னதை பாருங்க
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "தவெக தலைமையிலான கூட்டணியில் மதிமுக மிகவும் உறுதியாக இருக்கிறது.. தவெக கூட்டணியில் ஓர் அங்கமாக மதிமுக தொடர்ந்து பயணிக்கப் போகிறது.. வரவிருக்கும் 5 ஆண்டுகள் மட்டுமல்ல, அதற்கு அடுத்தடுத்த காலங்களிலும் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தான் தொடர்வார் என்ற முழுமையான நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதிபட தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.. அப்போது தமிழகத்தின் அரசியல் சூழல், கடந்த திமுக ஆட்சி குறித்தெல்லாம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

செங்கல்பட்டில் வைகோ
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகக் கடுமையான வெறுப்பின் உச்சத்தில் இருந்ததாக வைகோ நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கடந்த திமுக ஆட்சியில் கமிஷன், கரெக்ஷன், கட்டிங் என அனைத்து மட்டங்களிலும் ஊழல் மலிந்து காணப்பட்டதாக அவர் வெளிப்படையாகப் பேசினார்.
உடனே செய்தியாளர்கள், திமுக கூட்டணியில் இத்தனை காலம் நீடித்த மதிமுக, அப்போது ஏன் இந்த ஊழல்களைப் பற்றிப் பேசவில்லை என்று கேட்டனர்.. அதற்கு வைகோ, நாம் ஒரு கூட்டணியில் அங்கம் வகிக்கும் போது, அந்தப் பதவியில் இருந்துகொண்டே அரசை விமர்சிப்பது என்பது அயோக்கியத்தனமான செயலாக இருக்கும் என்பதால்தான், கூட்டணியில் இருந்தவரை இது குறித்து எதையும் பேசவில்லை என்றார்.
தவெகவுடன் மதிமுக உறுதி
தொடர்ந்து பேசிய வைகோ, தவெக தலைமையிலான கூட்டணியில் மதிமுக மிகவும் உறுதியாக இருக்கிறது.. தவெக கூட்டணியில் ஓர் அங்கமாக மதிமுக தொடர்ந்து பயணிக்கப் போகிறது.. வரவிருக்கும் 5 ஆண்டுகள் மட்டுமல்ல, அதற்கு அடுத்தடுத்த காலங்களிலும் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தான் தொடர்வார் என்ற முழுமையான நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது வைகோவிடம் செய்தியாளர் ஒருவர், திமுக கூட்டணியில் இருந்தபோது ஏன் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை நீங்கள் முன்வைக்கவில்லை, இப்போது மட்டும் ஏன் பேசுகிறீர்கள் என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் வைகோ கடுமையான அதிருப்திக்கு உள்ளானார். கேள்வி கேட்ட செய்தியாளருக்கு வைகோ உடனடியாக காரசாரமாக எதிர்வினையாற்றினார்.
வாக்குவாதம் வைகோவுடன்
இதன் காரணமாக அவருக்கும் அந்தச் செய்தியாளருக்கும் இடையே மேடையிலேயே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் வைகோவுக்கு ஆதரவாக அங்கிருந்த மதிமுக நிர்வாகிகளும் செய்தியாளருடன் வாக்குவாதத்தில் இறங்கியதால், பேட்டி நடைபெற்ற திருப்போரூர் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
தமிழக அரசியல் வட்டாரத்தில் திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தவெக பக்கம் மதிமுக சாய்ந்திருப்பது, தேர்தல் களத்தில் புது ட்விஸ்டை ஏற்படுத்தியுள்ளது.. ஆனால், இதன் தாக்கம் என்னவாக இருக்கப் போகிறது தெரியவில்லை.
முகத்தை திருப்பிய ஸ்டாலின்
ஏனென்றால், கடந்த வாரம் நடந்த விழா ஒன்றில், திமுக தலைவர் ஸ்டாலின் தன்னிடம் பேசவில்லை என்ற வைகோ குற்றஞ்சாட்டியிருந்ததாக செய்திகள் கசிந்திருந்தன..
ஒருவேளை கூட்டணி மாற்றம் குறித்து ஸ்டாலினுக்கு முன்பே தெரிந்திருக்கலாம் அல்லது வைகோவே இது குறித்து முன்கூட்டியே பேசியிருக்கலாம், அதனால் ஸ்டாலின் பேசாமல் தவிர்த்திருக்கலாம் என்று திமுகவினர் காரணம் சொன்னார்கள். அதற்கு மதிமுகவினரோ, திமுக கூட்டணியில் மதிமுகவின் சுயமரியாதை பாதிக்கப்பட்டது. அதனால்தான் வைகோ இப்படியொரு முடிவை எடுத்தார் என்ற பதில் வாதத்தை முன்வைத்தனர்..
முறிந்த கூட்டணி
உடனே திமுகவினர், 4 தொகுதிகள் போதாது என்றால் அப்போதே கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கலாமே என்று கேட்க, தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி தர்மத்திற்காகவே தொடர்ந்தோம் என்று மதிமுக தரப்பு மற்றொரு விளக்கம் தந்தது..
இப்படி சோஷியல் மீடியாவிலும், அரசியல் வட்டாரத்திலும் கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களுமே வலம்வந்த நிலையில், திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தவெக பக்கம் மதிமுக சாய்ந்துள்ளது பரபரப்பை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications