பள்ளிகள் திறப்பு! துள்ளிவரும் பிள்ளைச் செல்வங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்! முதல்வர் ஸ்டாலின் ட்விட்..!
சென்னை : கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் துள்ளிவரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் முதல் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 13 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.நேற்றுடன் விடுமுறை முடிந்த நிலையில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.
கடந்த வாரம் திறக்கப்படவிருந்த சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழக அரசு அறிவிப்பை ஏற்று இன்று திறக்கப்படுகின்றன. இதனையடுத்து மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
கோடை விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்கள்..1450 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவு
பள்ளிகள் திறப்பு
இன்று பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியரை வரவேற்க பள்ளி நிர்வாகங்கள் தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்கு இலவச பாடப் புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகங்களை இன்றே வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த முதல் ஒரு வாரத்திற்கு, புத்துணர்வு பயிற்சி, நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 27ம் தேதியும் வகுப்புகள் துவங்க உள்ளன.
ஏற்பாடுகள் தீவிரம்
ஒருமாத கால கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் தூய்மைப்படுத்தி, கிருமி நாசினி தெளித்து மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் வகுப்பறைகள் உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் ஐந்து நாட்கள் மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
முதல்வர் வாழ்த்து
இந்நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் துள்ளிவரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,"இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள். ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை.
அறிவு ஒளி
பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ - மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்! " என பதிவிட்டுள்ளார்.