தென் மாநிலங்களிடமிருந்து 33 லோக்சபா தொகுதிகள் அபேஸ் செய்யப்போறாங்க.. எச்சரிக்கும் கி.வீரமணி!
சென்னை: பொதுப் பிரச்னைகளுக்கு தென் மாநில முதலமைச்சர்கள் ஒருங்கிணைந்து உரிமைக் குரல் கொடுப்பது அவசியம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
1980களில் இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான பிரசாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, தமிழகத்தில். தென் மாநிலங்களில் நல்ல வளர்ச்சியும், கல்வியறிவு இருந்தது. எனவே, மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை தென் மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன.
1951ம் ஆண்டு 26.2 சதவிகிதமாக இருந்த தென் மாநிலங்களின் பங்கு, 2022ம் ஆண்டு 19.8 சதவிகிதமாக குறைந்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மக்கள் தொகையில், தென் மாநிலங்களின் பங்கு 26 சதவிகிதமாக இருந்தது. ஆனால், தற்போது 20 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. இதனால் தென் மாநிலங்கள் மக்களவை இடங்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மாநிலங்களில் தற்போதுள்ள 129 மக்களவை தொகுதிகளில், வருகிற காலகட்டங்களில் 33 இடங்களை இழக்க ஏற்பாடுகள் விரைவாக நடந்துகொண்டுள்ளதாக செய்திகள் வருகிறது. மக்கள்தொகை கட்டுப்பாடு என்ற மத்திய அரசின் கொள்கைகளை சிறப்பாக-வலிமையாகக் கடைப்பிடித்து, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்கான பரிசு தான் இந்த இழப்பு.
உலகின் மிக்பெரிய இந்து கோயிலை கட்டியெழுப்பும் ஃபோர்டு நிறுவன வாரிசு - எவ்வளவு செலவில் தெரியுமா?
129 இடங்களில் 33 இடங்களை இழக்கும் மாநிலங்கள் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா. 15-வது நிதிக் கமிஷன் 1971-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற பழைய ஆதார அடிப்படையை நீக்கிவிட்டு, 2021ம் ஆண்டின் ஆதார் குறியீட்டை அடிப்படையாகக் கொள்வதால், அரசியலிலும், ஜனநாயகத்திலும் இந்த விசித்திர வளர்ச்சிக்கான தண்டனை போலும்.
தென் மாநில முதலமைச்சர்கள் இதுபோன்ற பொதுப் பிரச்னைகளில் ஒருங்கிணைந்து உரிமைக்குரல் கொடுத்து இந்த ஆபத்துகளைக் களைய முன்வருதல் அவசரம், அவசியம். இதிலும் தமிழ்நாட்டு திராவிட மாடல் ஆட்சியும், அதன் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முயற்சிகளை முன்னெடுப்பதும் இன்றியமையாததாகும். இது காலத்தின் கட்டாயம்.