கலெக்டர்களுக்கு மேலிடத்திலிருந்து பறந்த முக்கிய உத்தரவு! ஆய்வின் போது சிக்கினால் ஆக்ஷன் தான்!
சென்னை: அரசு மருத்துவமனைகள் மீதும் சுகாதார அமைப்புகளின் செயல்பாடுகள் மீதும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தாலுகா தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான விவரம் வருமாறு;

''ஏற்கனவே அரசின் சார்பாக அனுப்பி உள்ள கடிதங்களின் படி தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் ஆய்வுகள் மேற்கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதன்படி, நம் மாநில மக்களின் நல்வாழ்வையும் உடல்நலனையும் உறுதி செய்வதற்கான நமது கூட்டு முயற்சியில், நமது சுகாதார அமைப்புகளின் செயல்பாடுகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.''
''பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரப் பாதுகாப்பும் அளிப்பதிலும், மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவதிலும் தாலுகா தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. அதில், ஆரம்பநிலை மற்றும் இரண்டாம் நிலை சிகிச்சைகளுக்கு இடையே முக்கியமான இணைப்பாக இம்மருத்துவமனைகள் செயல்படுகின்றன.''
''இந்நிலையில், இம்மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும், பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவை வழங்குதலில் மிக உயர்ந்த தரத்தை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் கருத்தில்கொண்டு, உரிய ஆய்வுகளின் போது, மருத்துவமனைகள் சிறந்த முறையில் செயல்படுவதையும், சிறந்த சேவை வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.''
''நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளின் கையிருப்பு மற்றும் விநியோகத்தை கண்காணித்து, தேவையான மருந்துகளின் சீரான விநியோகத்தை ஊக்குவித்து, பொது சுகாதாரம், துப்பரவுப் பணி, தூய்மையான கழிவறை மற்றும் தண்ணீர் இருப்பு ஆகியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்தி மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை முறையாக ஆய்வு மேற்கொள்ளவும்.''
''மின்-மருத்துவ உபகரணங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு, வழிகாட்டுதல்களின்படி,மருத்துவ கழிவுகளை சரியான முறையில் அகற்றுதலை ஆய்வு செய்வதுடன், மருத்துவர்கள், செவிலியர்களின் இருப்பை மதிப்பீடு செய்து, தரமான வேவையை வழங்குவதற்கு போதுமான மருத்துவப் பணிகள் பணிபுரிதலை கண்காணிப்பதுடன் கூடுதலாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாட்டை ஆய்வு மேற்கொள்ளவும்.''
''பொது சுகாதாரம் பற்றிய மேற்காணும் ஆய்வுகளுக்கான உங்களின் அர்ப்பணிப்பானது, சந்தேகத்திற்கு இடமின்றி நம் சுகாதார அமைப்பின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும், அரசின் அர்ப்பணிப்புமிக்க பணியை நிரூபிக்க சரியான தருணமாகும் வகையில் ஆய்வுகளின் அறிக்கைகள் மற்றும் விரிவான விளக்கங்களை உடனடியாக முதன்மைச் செயலாளரிடம் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்) கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.''












Click it and Unblock the Notifications