ஓய்வு நாளிலும் ஆய்வு! No ரெஸ்ட்! களமிறங்கிய சிவ்தாஸ் மீனா! வேகமெடுக்கும் ஒப்பந்தப் பணிகள்!
சென்னை: நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
நெம்மேலியில் ரூபாய் 1516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நாள்ளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் உள்ளது. கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும், கடல்நீரை நிலையத்திற்கு உள் கொணரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய் (Offshore works; Intake and Outfall Pipeline works), கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Seawater Intake Sump) காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி (Dissolved Air Flotation), வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்கத் தொட்டி (Clarified Water Tank), வடிகட்டப்பட்ட கடல்நீர் உந்து நிலையம் (Clarified Water Pumping Station) ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர், நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையம் (Ultra Filter & Reverse Osmosis Process Building), சுத்திகரிக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி (Product Water Tank), சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம் (Product Water Pumping Station), நிர்வாக மற்றும் காப்பாளர் கட்டிடம் (Administration Building), கசடுகளை கெட்டிப்படுத்தும் பிரிவு (Sludge Thickener), செதிலடுக்கு வடிகட்டி (Lamella Clarifier), பிரதான மின் நிலையம் (Main Electrical Building), புவியியல் தகவல் முறைமை (GIS Building), நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் உந்து நிலையம் (Ultra Filter & Reverse Osmosis Pump House), சுண்ணாம்பு செறிவூட்டும் நிலையம் (Limestone Filters Building) போன்ற கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மேலும், கடல்சார் பணிகளின் ஒரு பகுதியாக, 2250 மிமீ விட்டமுள்ள 1035 மீட்டர் நீளமுள்ள கடல்நீரை உட்கொள்ளும் குழாயில், 835 மீட்டர் நீளத்திற்கு குழாய் கடலில் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது, மேலும் மீதமுள்ள 200 மீட்டர் நீளத்திற்கு கடல்நீரை உட்கொள்ளும் குழாய் பதிக்கும் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவே இந்தியாவின் மிகப்பெரிய கடல்நீரை உட்கொள்ளும் குழாய் ஆகும் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீர் வெளியேற்றும் 1600 மிமீ விட்டமுள்ள 636 மீட்டர் நீளமுள்ள குழாயில் 600 மீட்டர் நீளத்திற்கு குழாய் கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு, 48.10 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

இந்நிலையத்திலிருந்து பெறப்படும் குடிநீர், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித்தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை(OMR)ல் அமைந்துள்ள தகவல் தொழில் நுட்ப பகுதிகளில் 9 இலட்சம் மக்கள் பயனடைவர் என தெரிவித்தார்.
மேலும் இந்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications