முதல்வர் ஸ்டாலின் கேட்ட ரிப்போர்ட்.. போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார் தலைமை செயலர்!
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக இன்று மாலை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங் கூலிப் படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சென்னை, பெரம்பூரில் மாலை நேரத்தில் வீட்டுக்கு முன்பாக நின்ற ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் அரசியல் கொலைகளும், கொலை முயற்சிகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் திமுக அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிட மாற்ற உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார். அதன்படி, சென்னை மாநகராட்சி காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டு, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பியாக இருந்த அருண் சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பியாக, தலைமையிடத்து ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரி டி.ஜி.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.
தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ், மற்றும் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம், அண்மைக்காலமாக நடந்து வரும் கொலை கொள்ளைச் சம்பவங்கள், போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்டவை குறித்து தலைமைச் செயலர், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசித்து, முதல்வருக்கு ரிப்போர்ட் தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications