தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதல்வர் முக ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவேங்கட உடையான்படி, கீழத்தெருவைச் சேர்ந்த பள்ளியில் 8 ஆம் வகுப்பைச் சேர்ந்த ஜஸ்வந்த், 5 ஆம் வகுப்பு பயின்று வந்த பாலமுருகன், மாதவன் ஆகிய மூவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். ஆனால், நேற்று மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கிராமத்தினருடன் சேர்ந்து போலீசாரும் மாணவர்களை தேடியுள்ளனர். கிராமத்தின் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த குளத்தின் அருகே மாணவர்களின் புத்தகப்பை மற்றும் ஆடைகள் கிடப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, குளத்தில் இறங்கிய தேடியபோது, மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, "தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மருதக்குடி கிராமம், திருவேங்கடஉடையான்பட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் ஜஸ்வந்த் (வயது 8) த/பெ.ஸ்ரீதரன், மாதவன் (வயது 10) த/பெ.கனகராஜ் மற்றும் பாலமுருகன் (வயது 10) த/பெ.செந்தில் ஆகிய மூவரும் நேற்று (11.7.2025) மாலை சுமார் 4.30 மணியளவில் பள்ளிக்குச் சென்றுவிட்டு மருதக்குடி கிராமத்தில் உள்ள ஊரணிகுளம் என்கிற பிள்ளையார் குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இச்சம்பவத்தில், உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது பெற்றோர்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications