டிரம்ப் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! இந்தியாவிற்காக வந்து நின்ற ரஷ்யா, சீனா! உதவிய 2 கம்யூனிஸ்ட் நாடுகள்
சென்னை: இந்தியாவிற்கு ஆதரவாக சீனாவும், ரஷ்யாவும் களமிறங்கி உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்து உள்ள நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக சீனா, ரஷ்யா களமிறங்கி உள்ளது.
இந்தியாவிற்கும் - சீனாவிற்கும் நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது அமெரிக்க வரி சர்வாதிகார விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சீனா களமிறங்கி உள்ளது. அதேபோல் இன்னொரு கம்யூனிஸ்ட் நாடான இந்தியாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யாவும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்கிறது.

இந்தியா மீது கூடுதல் வரி
டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
இந்தியாவிற்கு ஆதரவாக வரும் ரஷ்ய அதிபர்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் வியாழக்கிழமை அன்று மாஸ்கோவில் தெரிவித்தார். இந்தச் சந்திப்பிற்கான தேதிகள் இன்னும் குறிப்பிடப்படவில்லை. எனினும், இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் இந்த சந்திப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிகழக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
அதிபர் புடின் இந்தியாவிற்கு வருவது குறித்த மகிழ்ச்சியைத் தெரிவித்த தோவல், "எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான, நீண்டகால உறவு உள்ளது. இந்த உறவை நாங்கள் மதிக்கிறோம். உயர்மட்ட அளவிலான ஈடுபாடுகள் பெரிய அளவில் பங்களித்துள்ளன. அதிபர் புடின் இந்தியாவிற்கு வரும் செய்தி கேட்டு நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். தேதிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
புடினின் இந்திய வருகை குறித்து மாஸ்கோ இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. ஆனால் இந்த அறிவிப்பு, ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் காரணமாக டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் வந்துள்ளது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகம் சோவியத் யூனியன் காலத்திலிருந்தே நீண்டகால உறவைக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இருதரப்பு வர்த்தகத்தில் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன. கடந்த நான்கு வருட போரின் தொடக்கத்திலிருந்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2023 மே மாதத்தில், இந்தியா ஒரு நாளைக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்கியது, இது அதன் மொத்த இறக்குமதியில் சுமார் 45% ஆகும்.
அதிபர் புதின் வருகை, இந்தியாவின் புவிசார் அரசியல் உத்தியில் ஒரு முக்கிய தருணமாக அமையலாம். டிரம்ப்பின் வர்த்தக வரி மிரட்டல்களுடன் இந்த வருகை சரியாகப் பொருந்துகிறது.
களமிறங்கிய கம்யூனிஸ்ட் சீனா
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டிற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரிகளும், அமெரிக்காவுடன் இந்தியா மற்றும் சீனாவிற்கு மோதல் நிலவும் சூழலில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தியான்ஜினில் நடைபெறும் வருடாந்திர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சனிக்கிழமை சீனா சென்றடைந்தார். இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கால்வான் மோதலுக்குப் பிறகு, ஏழு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை.
பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், "இன்று உலகம் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் மாற்றங்களால் சூழப்பட்டுள்ளது. சர்வதேச சூழல் நிலையற்றதாகவும் குழப்பமானதாகவும் உள்ளது. இந்த ஆண்டு சீனா-இந்தியா இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு விழாவாகும். இரு தரப்பினரும் நமது உறவை ஒரு மூலோபாய உயரத்திலும் நீண்டகால கண்ணோட்டத்திலும் அணுக வேண்டும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications