செங்கோட்டையனை தொடர்ந்து.. கொங்கு மண்டல அதிமுகவில் விழுந்த ஓட்டை.. தட்டித் தூக்கிய செந்தில் பாலாஜி!
சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், அண்ணா தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருந்த சின்னச்சாமி திமுகவில் இணைந்துள்ளார். 2006 முதல் 2016 வரை சிங்காநல்லூர் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த சின்னச்சாமி திமுகவில் இணைந்திருப்பது, அதிமுகவுக்கு கூடுதல் சிக்கலை உருவாக்கி இருக்கிறது. இதுவும் செந்தில் பாலாஜியின் வேலையாக அமைந்திருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக பல்வேறு பணிகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள், அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே மைத்ரேயன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் ஐக்கியமாகினர்.

தற்போது அடுத்ததாக கொங்கு மண்டலத்தில் இருந்து அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி திமுகவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துள்ளார். இவர் ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர். 2006ஆம் ஆண்டு ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தில் பிளவு ஏற்பட்ட போது, ஒரு பிரிவு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது.
அப்போது சின்னச்சாமி இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்றார். அதன்பின் அதிமுகவில் இணைந்த அவர், மீண்டும் 2011ஆம் ஆண்டு சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட போது, திமுக வேட்பாளர் கார்த்திக்கிடம் தோல்வியை தழுவினார். இருந்தாலும் அதிமுக தொழிற்சங்க பேரவையின் செயலாளராக செயல்பட்டு வந்தார்.
அப்போது ரூ.8 கோடியை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அதிமுகவில் இருந்து சின்னச்சாமி நீக்கப்பட்டார். இதன்பின் அமமுகவில் இணைந்த அவர், சில ஆண்டுகளிலேயே பாஜகவில் இணைத்து கொண்டார். ஆனால் போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படாததால், மீண்டும் அதிமுகவுக்கே வந்தார்.
அதிமுகவில் இணைந்தாலும் சின்னச்சாமி அதிருப்தியுடன் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சின்னச்சாமியை அண்ணா அறிவாலயம் அழைத்து வந்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைத்தார். செந்தில் பாலாஜியும் சில ஆண்டுகள் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட்டவர் தான்.
இதனால் செந்தில் பாலாஜி உத்தரவாதத்தின் பெயரில் திமுகவில் இணைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் இம்முறை அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று திமுக காய்களை நகர்த்தி வரும் சூழலில், கோவை அதிமுகவில் முக்கியப் புள்ளியாக இருந்த சின்னச்சாமியை திமுக தூக்கி இருக்கிறது. இதனால் அதிமுகவுக்கு கூடுதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைவோரின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதனையறிந்தும் எடப்பாடி பழனிசாமி எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார். ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். தற்போது மற்றொரு கோவை நிர்வாகி திமுகவில் இணைந்திருக்கிறார். இதனால் அதிமுக கொங்கு மண்டலத்தில் சரிவை சந்திக்கும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications