கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! திணறும் சென்னையின் சாலைகள்
சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் பண்டிகைகள் மற்றும் விடுமுறை தினங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இதனால், பண்டிகைக்கு முந்தைய நாட்களில் சென்னையில் இருந்து பெரும் கூட்டமே தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கும். இதனால், பேருந்து, ரயில்கள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதும்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை
அந்த வகையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக இன்று சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் கூட்டம் அலைமோதுகிறது. பேருந்துகள் நத்தை போல ஊர்ந்து செல்லும் அளவுக்கு கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. அதேபோல், ரயில்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.

போக்குவரத்து நெரிசல்
முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட்டுகள் கிடைக்காத பயணிகள் முன்பதிவில்லா பெட்டிகள் கடும் நெருக்கடியாக பயணிப்பதை காண முடிகிறது. எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் ஜி.எஸ்.டி சாலையில் இன்று மாலையில் இருந்தே போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக பீக் அவர்களில் வாகன ஓட்டிகள் திண்டாடிப்போகும் அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

பயணிகள் கூட்டம்
குறிப்பாக அதிகமான வாகனங்கள் வருவதால் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருங்களத்தூர் மேம்பாலம் மீது வாகனங்கள் அணிவகுத்தும் நிற்கும் அளவுக்கு நெரிசல் இருந்தது. இதற்கிடையே பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருப்பதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை கட்டணம்
ரெட் பஸ் போன்ற இணையதளத்தில் சென்னையில் இருந்து மதுரை, தூத்துகுடி, உடன்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற பகுதிகளுக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை கட்டணம் போடப்பட்டு உள்ளதாகவும் பயணிகள் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளனர். சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சாதரண நட்களில் ரூ. 750 முதல் 1,800 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய தினம் 3,500 வரை கட்டணம் நிர்ணயித்து இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.

பெரும்பாலான பேருந்துகள் நிரம்பிவிட்டதால்
இதற்கிடையே, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளையும் தமிழக அரசு இயக்கி வருகிறது. சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் நிரம்பிவிட்டதால் இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதலாக 500 பேருந்துகள்
மேலும் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் பயணிகள் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications