நடுவானில் ரகளை.. விமானத்தில் சிகரெட் பிடித்த பயணி சென்னையில் கைது
சென்னை: விமானத்தில் புகைபிடித்த பயணி ஒருவரை, சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவை சேர்ந்த சையத் லியாகத் அலி என்ற அந்த பயணி, கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து வந்த விமானத்தில், நடுவானில் புகைபிடித்ததாக தெரிகிறது. விமான பணிப்பெண்கள் கண்டித்தும், அவர் கேட்காமல் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சையத் லியாகத் அலியை, சென்னை விமான நிலைய போலீசில், அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தோஹாவில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணி ஒருவர் சிகரெட் பிடித்து ரகளையில் ஈடுபட்டு கைதான சம்பவம் நடந்துள்ளது. விமானம் நடுவானில் பறந்தபோது, விமான பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு எதிராக வேலூரை சேர்ந்த பாலாஜி (58) என்பவர் தனது இருக்கையில் அமர்ந்தபடி சிகரெட் புகைத்தார். பணிப்பெண்கள், புகைபிடிக்க எதிர்ப்பு தெரிவித்தபோது, பாலாஜி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து விமான பைலட், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையான, ஏ.டி.சி.,க்கு தகவல் கொடுத்தார்.அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் தரையிறங்கியதும், தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தில் ஏறி, சம்பந்தப்பட்ட நபரை பிடித்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications