“சீமானுக்கு எதிரா பேசுனா தேடி வந்து அடிப்பேன்”.. பிரஸ் மீட்டில் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்!
சென்னை: திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர், சீமான் மீது குற்றம்சாட்டி இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தியபோது திடீரென உள்ளே நுழைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அவர்களை தாக்கி திடீரென மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த மாதம் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் பலர் விலகியிருந்தனர். அதன் பின்னர் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார் விலகினார். இருவரும் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் கட்சியில் இருந்து விலகி, சீமான் பேசிய தனிப்பட்ட கருத்துக்கள் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறினார். அதேபோல், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டனும், சீமான் மீது குற்றம்சாட்டிவிட்டு கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளவஞ்சி விலகியுள்ளார். கட்சித் தலைமையின் செயல்பாடுகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும், குறிப்பாக பெண்களுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இன்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்ட நாதக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதால் தொடர் தோல்வியைச் சந்திப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது, அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சீமான் மீது தேவேந்திரன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியதற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தவர்களுக்கும், நாதக நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
சீமானுக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பு நடத்தினால், எங்கு போனாலும் தேடி வந்து அடிப்பேன் என நாதக நிர்வாகி ஒருவர் மிரட்டல் விடுத்தார். நாம் தமிழர் கட்சியின் இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் இடையேயான மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications