பிறக்கப் போகிறது கள்ளக்குறிச்சி மாவட்டம்.. அதிமுக - அமமுக மோதல் தொடங்கியது!
கள்ளக்குறிச்சி அறிவிப்பில் அமமுக, அதிமுக மோதல் ஆரம்பமாகி உள்ளது.
சென்னை: கள்ளக்குறிச்சி அறிவிப்பு விஷயத்தில் அதிமுகவுக்கும், அமமுகவுக்கும் மோதல் ஆரம்பமாகி விட்டது.
கடந்த 2016 சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எப்படியும் கள்ளக்குறிச்சியை தனிமாவட்டமாக அறிவிப்பார் என்று எல்லோருமே எதிர்பார்த்தனர்.
ஆனால் திடீர் உடல்நலக்குறைவு, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு மாவட்டத்தை பிரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வரான உடனேயே இந்த அறிவிப்பு வெளியாகும் என்றுகூட எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்நிலையில் இன்று அந்த அறிவிப்பு நிறைவேறி உள்ளது.
எம்எல்ஏ பிரபு
ஆனால் இப்படி ஒரு கோரிக்கையை அன்றைய தினம் ஜெயலலிதாவின் பார்வைக்கு கொண்டு சென்று அதை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்க வைத்ததே கள்ளக்குறிச்சி சட்டசபைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ பிரபுதான் என்கிறது அரசியல் வட்டாரம். அன்றைய அதிமுக பிரபு இன்று தினகரன் ஆதரவாளராக இருக்கிறார்.
இதுதான் முதல் லட்சியம்
"2016 சட்டசபை தேர்தலில் என்னை கள்ளக்குறிச்சி வேட்பாளராக போட்டியிட வைத்ததே ஜெயலலிதாதான், கள்ளக்குறிச்சியை மாவட்டமாக்க வேண்டும் என்று அவர் வாக்குறுதியும் தந்தார்" என்றுதான் ஒவ்வொரு சட்டசபை கூட்டத்தொடரிலும் இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்து கொண்டிருந்தார். இதுதான் தனது முதல் லட்சியம் என்றும் சூளுரைத்தே வந்தார்.
வெளிநடப்பு
இந்த நிலையில், தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள், நலத்திட்டங்கள் பேசப்பட்டும், தீர்க்கப்பட்டும் வருகின்றன. அந்த வகையில், நேற்றுகூட கேள்விநேரத்தின்போது இதை பற்றி பேச வாய்ப்பு கோரினார் பிரபு. ஆனால் அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது. இதற்காக சட்டமன்றத்திலிருந்தே வெளிநடப்பும் செய்துள்ளார். இது சம்பந்தமாக பிரபு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆதங்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.
கோரிக்கை வைத்தேன்
அதில், "கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் #கள்ளக்குறிச்சி மக்களுக்கு வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தனி மாவட்டக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை..! விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டம் ஆகவே #நிர்வாக_வசதிக்காகவும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் #கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கிட வலியுறுத்தி கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன்.
|
பேச வாய்ப்பு மறுப்பு
இதையடுத்து வருவாய் துறை #அமைச்சர்_உதயகுமார் அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது அதனால் அரசின் கொள்கை முடிவுக்கு விடப்பட்டு விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்... ஆனால் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலையில் இன்றைய கேள்வி நேரத்தில் பேச வாய்ப்பு கோரிய போது #வாய்ப்பு_மறுக்கப்பட்டதால் இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ட்வீட்டில் குமுறல்
மேலும் ஒரு டிவீட் ஒன்றையும் போட்டுள்ளார் பிரபு. அதில், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் #கள்ளக்குறிச்சி மக்களுக்கு வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தனி மாவட்டக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.. என்று குமுறல் வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
வெடித்து கிளம்ப போகிறது
மறைந்த ஜெயலலிதா தந்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்த அறிவிப்பினை வெளியிடுவதாக அதிமுக தரப்பு சொல்லும் என்றாலும், எம்எல்ஏ பிரபு ஜெயலலிதாவிடம் எழுப்பிய கோரிக்கையின் விளைவாகவே இப்படி ஒரு அறிவிப்பு வந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதை முதல்வர் தனது வாயால் சொல்லவில்லை என்ற அதிருப்தியை பிரபு வெளிப்படுத்தியுள்ளார். எனவே கள்ளக்குறிச்சி விவகாரம், அதிமுக, அமமுக விவகாரமாக விரைவில் வெடித்து கிளம்பும் என தெரிகிறது.